மைதானத்திற்குள் நுழைந்து வீராங்கனைகளை கட்டிப் பிடிக்க ரசிகர் முயற்சி.! தடுத்து நிறுத்திய யுபி வாரியர்ஸ் வீராங்கனை..

By 
upv

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரையில் நடந்த போட்டிகளின் படி டெல்லி கேபிடல்ஸ் 3ல் 2 வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது. இதே போன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம் பிடித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியும் 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளது. யுபி வாரியர்ஸ் 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 4ஆவது இடத்திலும், குஜராத் ஜெயிண்ட்ஸ் விளையாடிய 2 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடம் பிடித்துள்ளது.

ஆண்கள் கிரிக்கெட் போட்டி போன்று மகளிருக்கும் ரசிகர்கள் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் தான் நேற்று முன் தினம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான 6ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியானது 161 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 162 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட யுபி வாரியர்ஸ் விளையாடி 16.3 ஓவரளில் 3 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அப்போது தான் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தது. அப்போது சஜீவன் சஞ்சனா 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த போது மைதானத்திலிருந்த ரசிகர் ஒருவர் வேகமாக ஓடி வந்து வீராங்கனைகளை கட்டி பிடிக்க முயற்சித்துள்ளார். ஆனால், ஆஸ்திரேலியா வீராங்கனை அலீசா ஹேலி அந்த ரசிகரை தடுத்து நிறுத்தினார். இதையடுத்து பாதுகாவலர்கள் வந்து அந்த ரசிகரை அழைத்து சென்றனர்.

இதற்கு முன்னதாக ஆண்கள் கிரிக்கெட் போட்டிகளில் தான் இது போன்ற சம்பங்கள் அடிக்கடி நடக்கும். விராட் கோலி, ரோகித் சர்மா, சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி ஆகியோரது கட்டியணைப்பது, அவர்களது காலில் விழுவது என்று ரசிகர்கள் செய்வது வழக்கமாக நடக்கும். ஆனால், மகளிர் கிரிக்கெட் போட்டியில் இது போன்ற சம்பவம் முதல் முறையாக நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story