கவுதம் கம்பீரின் மாஸ்டர் வியூகம்; கேகேஆர் அணியை சாம்பியன் ஆக்கிய உத்திகள்..

By 
gt7

கவுதம் கம்பீர் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இருமுறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. மூன்றாவது முறையாக ஐபிஎல் 2024-ல் கவுதம் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இணைந்து மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்ல வைத்துள்ளார். கம்பீரின் அணுகுமுறை நட்பு ரீதியானதும் அதே வேளையில் ஆக்ரோஷமானதாகவும் கண்டிப்பானதாகவும் இருக்கும்.

இதற்கு முன்பாக கம்பீர் வென்ற பிறகு, திரண்ட கொல்கத்தா அணியிடத்தில் இந்த முறை பார்த்தது போன்ற தெளிவான தத்துவம் இருந்ததில்லை. ஓர் அணியாகத் திரண்டு எழுந்து ஆடியதில்லை. தனித்தனி வீரர்களாக ஆடுவார்கள். தினேஷ் கார்த்திக் வழி நடத்திய போது தேவையில்லாமல் அணியில் விரிசலெல்லாம் ஏற்பட்டது.

வலுவான அணியை கம்பீர் படை கட்டமைத்தது மட்டுமல்ல, ஐபிஎல் வரலாற்றில் இத்தனை வலுவான அணியாக கொல்கத்தா இருந்ததில்லை. கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் சொன்னது போல் ‘ஏறக்குறைய தோற்கடிக்கப்பட முடியாத’ அணியாகவே கொல்கத்தா ஆடியது. ஆனால் திடீரென இந்த மாற்றம் நிகழவில்லை.

சிறிது காலமாக இந்த மாற்றங்களுக்கான தயாரிப்புகள், நிகழ்முறைகள் இருந்திருக்க வேண்டும2022, 2023 ஐபிஎல் தொடர்களில் 7ம் நிலையில் முடிந்த கேகேஆர் இந்த முறை கோப்பையை வென்றதென்றால் அதில் கம்பீரின் பங்கு ஏராளம் என்றுதான் தெரிகிறது. அதே போல் அபிஷேக் நாயரின் பங்கும் அதிகம். ஆனால் அபிஷேக் நாயர் கவுதம் கம்பீரிடமிருந்தே ஆலோசனைகள் பெற்றிருக்கக் கூடும்.

இந்த சீசனில்தான் சன்ரைசர்ஸ் அட்டாக்கிங் கிரிக்கெட் அணியாக ஆடியது. ஆனால் கொல்கத்தா இயான் மோர்கன், தினேஷ் கார்த்திக் காலத்திலிருந்தே அட்டாக்கிங் தான். பிரெண்டன் மெக்கல்லம் பயிற்சியாளராக இருந்த போது அட்டாக்கிங் தான் அவர்களது சிறந்த உத்தியாக இருந்தது. இந்த முறையும் அதே பார்முலாதான்.

கவுதம் கம்பீர் வந்து ஒரு ஸ்திரத்தன்மையையும் ஓர் அமைப்பாக்கத்தையும் கட்டமைத்தார். கவுதம் கம்பீரின் ஒரு உள்ளீடு என்னவெனில் 2022, 23 போல் அல்லாமல் ஸ்திரமான ஓப்பனர்களை முதலில் கொண்டு வந்தார். 2022-ல் பல ஓப்பனிங் சேர்க்கைகள் இருந்தன. 2023-ல் 7 வித்தியாசமான காம்பினேஷன்கள் தொடக்கத்தில் இருந்தன. ஆனால் இந்த முறை கம்பீர் மிகவும் கண்டிப்பாக சுனில் நரைனின் ஆக்ரோஷ அதிரடியைப் பயன்படுத்திக் கொள்ள அவரை மீண்டும் தொடக்க நிலைக்குக் கொண்டு வந்தார்.

இதோடு இங்கிலாந்தின் பில் சால்ட் சற்றும் எதிர்பாராத விதத்தில் அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடினார். இதில் வேடிக்கை என்னவெனில் ஏலத்தில் பில் சால்ட்டை யாரும் வாங்க முன்வரவில்லை என்பதே. ஜேசன் ராய் விளையாட முடியாமல் போனது மறைமுக ஆசீர்வாதமானது, பில் சால்ட்டைக் கொண்டு வரச் செய்தார் கம்பீர். பில் சால்ட் 435 ரன்களை இந்த ஐபிஎல் தொடரில் விளாசியது சாதாரணமான பங்களிப்பல்ல.

இதில் மாஸ்டர் ஸ்ட்ரோக், சுனில் நரைனை ஓப்பனிங்கில் மீண்டும் கொண்டு வந்ததுதான். 482 ரன்களை அவர் விளாசியுள்ளார். இதில் 3 அரைசதங்கள் ஒரு சதமும் அடங்கும். அதேபோல் ஆந்த்ரே ரஸலின் ஆட்டத்தில் புது உற்சாகமும் புதுப்பொலிவும் அவர் ஃபீல்டிங்கிலும் புலியாகத் திகழ்ந்தது கவுதம் கம்பீர் கொடுத்த உற்சாகத்தின் காரணமாக, உந்துதலின் காரணமாக இருந்திருக்கலாம்.

குறிப்பாக, ஷார்ட் பிட்ச் பவுலிங்கில் கொல்கத்தா பேட்டர்களை முன்பு மடக்கி வந்தனர். இந்த முறை அந்த ஷார்ட் பிட்ச் பலவீனத்திலிருந்து மீண்டது. கம்பீர் மற்ற பயிற்சியாளர்களுடன் அமர்ந்து இந்த பலவீனத்தை வீரர்களிடம் பேசி தீர்வு கண்டிருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அதே போல் ரமந்தீப் சிங் என்பவரை ஒரு பினிஷராக உருவாக்கப்பட்டு அவரது ஸ்ட்ரைக் ரேட் 240 என்ற அளவுக்கு சிறப்பாக அமைந்தது. இந்த முறை ஷார்ட் பிட்ச் பவுலிங்கிற்கு எதிராக நரைன், ஸ்ரேயஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், ரஸல் அனைவருமே எந்த ஒரு பலவீனத்தையும் காட்டாமல் ஆடியதிலும் கம்பீரின் பங்கு அதிகம்.

அதேபோல் ரகுவன்ஷி, இந்தப் புது வருகையினால் ரிங்கு சிங்கிற்கு அமைதியான ஐபிஎல் தொடராக அமைந்தது. இன்னொரு முக்கியமான விஷயம் வீரர்கள் சொதப்பினால் உடனே அவரை நீக்கி விட்டு வேறு ஒருவரை கொண்டு வரும் போக்கு கொல்கத்தாவிடம் இல்லை. கம்பீர் வீரர்களிடத்தில் நம்பிக்கை வைத்து வாய்ப்புகளை தொடர்ந்து அளிக்கச் செய்துள்ளார். எனவேதான், இந்திய அணிக்கு ராகுல் திராவிட்டுக்குப் பிறகு, கம்பீரை பயிற்சியாளராக  நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் இப்போது கிளம்பியுள்ளன.

Share this story