மிதாலி ராஜ் சாதனையை முறியடித்தார் ஹர்மன்ப்ரீத்; எப்படி தெரியுமா?
 

By 
harman2

149 போட்டிகளில் விளையாடிய ஹர்மன்ப்ரீத் கவுர் 2992 ரன்களை எடுத்திருந்தார். இந்நிலையில் அயர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 8 ரன்கள் எடுத்தபோது 3 ஆயிரம் ரன்களை எடுத்தார்.

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 3 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

150 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இந்த ரன்களை கடந்திருக்கிறார். விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு அடுத்தபடியாக 3 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஹர்மன்ப்ரீத் கவுர். 33 வயதாகும் ஹர்மன்ப்ரீத் கவுர் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிகபட்சமாக 103 ரன்களை எடுத்துள்ளார்.

இது எந்தவொரு இந்திய வீராங்கனையும் செய்யாத சாதனையாகும். இதேபோன்று சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்சர்களை (70) அடித்த வீராங்கனை என்ற ரிக்கார்டையும் அவர் ஏற்படுத்தியுள்ளார். இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் டி20 உலகக்கோப்பை தொடரில் 13 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்தார்.

இந்த சாதனையையும் ஹர்மன்ப்ரீத் கவுர் (14) முறியடித்துள்ளார். கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து அனைத்து டி20 உலகக்கோப்பை போட்டிகளிலும் இடம்பெற்றுள்ளார் ஹர்மன்ப்ரீத் கவுர். மொத்தம் 34 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 500 ரன்களை எடுத்திருக்கிறார்.

சமீபத்தில் நடந்த மகளிர் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ஹர்மன்ப்ரீத் கவுரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 1.80 கோடிக்கு எடுத்துள்ளது. இந்த கிரிக்கெட் தொடர் மார்ச் 4ஆம் தேதி தொடங்கவுள்ளது. 

Share this story