ஒருவரை காப்பற்றியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்: முகமது ஷமி..

By 
shami2

இந்தியாவில் நடந்த 13ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த தொடரில் 6 போட்டிகளில் விளையாடிய முகமது ஷமி 23 விக்கெட்டுகள் கைப்பற்றி பல சாதனைகள் படைத்தார். ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். இதையடுத்து தனது சொந்த ஊருக்கு சென்ற ஷமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான் உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். மலைப்பிரதேசமான அந்தப் பகுதியில் தனது காருக்கு முன் சென்று கொண்டிருந்த காரானது சாலையின் ஓரத்தில் இருந்த பெரிய பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இதைப் பார்த்த ஷமி உடனே தனது காரை நிறுத்தி விட்டு ஓடிச் சென்று பார்த்துள்ளார்.

அந்த காரில் ஒருவர் மட்டுமே இருந்துள்ளார். எனினும், அவருக்கு பெரிதாக காயம் ஒன்றும் ஏற்படவில்லை. தற்போது விற்கப்படும் கார்களில் விபத்து நேரத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் ஏர் பேக் பொருத்தப்படுகிறது. அந்த வகையிலும் இந்த காரிலும் ஏர் பேக் இருந்துள்ளதைத் தொடர்ந்து கார் ஓட்டி வந்தவர் விபத்திலிருந்து தப்பியுள்ளார்.

காரில் இருந்தவரை வெளியில் வர உதவி செய்ததோடு, அவருக்கு காயம் ஏதும் ஏற்பட்டிருக்கிறதோ என்று பார்த்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து ஷமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஒருவரை காப்பாற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவர் மிகவும் அதிர்ஷ்டசாலி. கடவுள் அவருக்கு 2ஆவது வாழ்க்கை அளித்துள்ளார். அவரது கார் நைனிடால் அருகில் எனது காருக்கு முன் கீழே மலைப் பாதையில் சரிந்தது. நாங்கள் அவரை பாதுகாப்பாக மீட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this story