ஐசிசியின் மதிப்பீட்டை தான் ஒப்புக்கொள்ளவே முடியாது: ராகுல் டிராவிட் திட்டவட்டம் 

By 
dra2

2023 உலகக்கோப்பை தொடரில் பயன்படுத்தப்பட்ட பிட்ச்கள் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக ஆடிய பிட்ச்களை சுமாரான பிட்ச் என ஐசிசி குறிப்பிட்டு இருக்கிறது.

நேரடியாக சொல்லாவிட்டாலும், இந்திய அணி தனக்கு சாதகமாக அந்த பிட்ச்களை பயன்படுத்தி இருக்க வாய்ப்பு இருப்பதாக சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது அந்த அறிக்கையின் முடிவு.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலகக்கோப்பை போட்டி சென்னையில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 199 ரன்களுக்கு சுருண்டது. அந்த பிட்ச் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு சுருண்டது. அந்தப் போட்டியிலும் இந்தியாவின் ஸ்பின்னர்கள் சிறப்பாக ஆடி விக்கெட் வேட்டை நடத்தினர்.

இந்த நிலையில் தான், சென்னை மற்றும் அகமதாபாத் பிட்ச்களை ஐசிசி சராசரியான பிட்ச்கள் என மதிப்பிட்டுள்ளது. அதே சமயம், மற்ற பிட்ச்களை எல்லாம் நல்ல பிட்ச், மிக நல்ல பிட்ச் என மதிப்பிட்டு இருக்கிறது. இந்த காரணத்தால், இந்திய அணி தனக்கு ஏற்றவாறு சென்னை, அகமதாபாத் பிட்ச்களை மாற்றி அமைத்ததா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

ஐசிசியின் இந்த பிட்ச் மதிப்பீடு பற்றி ராகுல் டிராவிட் பேட்டியில் பேசுகையில், சாமர்த்தியமாக இந்தியாவுக்கு எதிராக இந்த கருத்து இருப்பதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதே சமயம், ஐசிசியின் மதிப்பீட்டை தான் ஒப்புக் கொள்ளவே முடியாது என திட்டவட்டமாக கூறினார்.

மேலும், 300, 350 ரன்கள் குவிக்கும் பிட்ச் தான் நல்ல பிட்ச் என்றால் எதற்காக இங்கே பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஸ்பின்னர்கள் ஏன் இருக்கிறார்கள்? 6, 4 மட்டுமே அடிக்க வேண்டும் என்றால் டி20 பிட்ச்கள் இருக்கின்றன. அனைத்து திறமைகளும் இங்கே வெளிக்காட்டப்பட வேண்டும் என்றார் ராகுல் டிராவிட். ஜடேஜா, சான்ட்னர் போன்றோர் சென்னை ஆடுகளத்தில் சிறப்பாக பந்து வீசியதையும் சுட்டிக் காட்டினார்.

கடைசியாக, சில பிட்ச்கள் ஸ்பின் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். சில பிட்ச்கள் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். ஆனால், வெறும் பவுண்டரி மட்டுமே அடிக்கப்பட வேண்டும் என்றால் அதை தான் முற்றிலும் ஒப்புக் கொள்ள மாட்டேன் என கூறினார் ஜடேஜா.

Share this story