ஐபிஎல் 2024: ஒரு முறை கூட சாம்பியன் ஆகாத வேதனை.. ஆர்சியின் பெயர் மாற்றமா? வைரலாகும் நிகழ்வு..

By 
zx2

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் 16 ஐபிஎல் சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. இதில் ஒரு முறை கூட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டிராபியை கைப்பற்றவில்லை. 

ஆர்சிபி அணியில் ராகுல் டிராவிட், கெவின் பீட்டர்சன், அணில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, விராட் கோலி, ஷேன் வாட்சன் மற்றும் பாப் டூப்ளெசிஸ் என்று 7 பிளேயர்ஸ் கேப்டன்களாக இருந்துள்ளனர்.

இவர்களது தலைமையில் ஒரு முறை கூட ஆர்சிபி டிராபியை வெல்லவில்லை. ஆர்சிபி அணியானது 2009, 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டி வரை வந்து தோல்வியை தழுவியது. கடந்த 2016 ஆம் ஆண்டிற்கு பிறகு ஒரு முறை கூட ஆர்சிபி அணியானது இறுதிப் போட்டிக்கு செல்லவில்லை. இந்த நிலையில் தான் ஆர்சிபி அணியானது அணியின் பெயரை மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

வரும் 19 ஆம் தேதி அணியின் பெயர் மாற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்று ஆர்சிபி அணியானது வெளியிட்டுள்ளது. அதில், காந்தாரா பட நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டியை வைத்து புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது அதில், 3 மாடுகளை நிற்க வைத்து ஒவ்வொரு மாட்டின் மீது சால்வையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்று எழுதப்பட்டிருக்கிறது.

இதில், பெங்களூர் என்ற வார்த்தை பிடிக்கவில்லை என்று கூறி அந்த மாட்டை விரட்டுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. மேலும், இப்போது புரிகிறதா என்று அவர் கேட்கிறார். இதன் மூலமாக பெங்களூர் என்ற வார்த்தையை பெஞ்களூரு என்ற மாற்றம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. 

ஐபிஎல் தொடங்கப்பட்ட போது கர்நாடகாவின் தலைநகர் பெங்களூர் என்ற இருந்தது. அது 2014 ஆம் ஆண்டு பெங்களூரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்ற அணியின் பெயரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்று மாற்றம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக டெல்லி டேர்டெவில்ஸ் என்று இருந்த அணியின் பெயரானது டெல்லி கேபிடல்ஸ் என்று மாற்றம் செய்யப்பட்டது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்று இருந்தது பஞ்சாப் கிங்ஸ் என்று மாற்றப்பட்டது.
 

Share this story