ஐபிஎல் களம் : இன்று கலக்கப் போறது பஞ்சாப்பா? குஜராத்தா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

By 
guja4

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று நடக்கும் 18-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது.

நடப்பு தொடரில் 2 வெற்றி (கொல்கத்தா, ராஜஸ்தானுக்கு எதிராக), ஒரு தோல்வியை (ஐதராபாத்துக்கு எதிராக) சந்தித்துள்ள பஞ்சாப் அணி சொந்த மண்ணில் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புவதில் தீவிரம் காட்டுகிறது.

பஞ்சாப் அணியில் கேப்டன் ஷிகர் தவான் (2 அரைசதத்துடன் 225 ரன்) மட்டும் தொடர்ந்து ரன் குவிக்கிறார். முந்தைய ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு பக்கம் மளமளவென விக்கெட் சரிந்தாலும் கடைசி வரை போராடி 99 ரன்கள் எடுத்து அணியை கவுரவமான நிலைக்கு கொண்டு வந்தார்.

சாம் கர்ரன், ஷாருக்கான், பிரப்சிம்ரன்சிங், ராஜபக்சே உள்ளிட்டோரும் கைகொடுக்க வேண்டியது அவசியமாகும். கால்முட்டி காயத்தில் இருந்து மீண்டுள்ள இங்கிலாந்தை சேர்ந்த அதிரடி ஆல்-ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் இப்போது தான் அணியுடன் இணைந்துள்ளார். அவரையும், வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடாவையும் இன்றைய ஆட்டத்தில் களம் இறக்குவது குறித்து அணி நிர்வாகம் பரிசீலிக்கிறது.

நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் இரு ஆட்டங்களில் சென்னை மற்றும் டெல்லியை புரட்டியெடுத்தது. கொல்கத்தாவுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 204 ரன்கள் எடுத்தும், கடைசி ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் தொடர்ந்து 5 சிக்சர்களை வாரி வழங்கியதால் கடைசி பந்தில் குஜராத் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

உடல்நலக்குறைவால் கடந்த ஆட்டத்தில் விளையாடாத கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அணிக்கு திரும்புகிறார். மற்றபடி சாய் சுதர்சன், சுப்மன் கில், டேவிட் மில்லர், விருத்திமான் சஹா, விஜய் சங்கர், ரஷித்கான், முகமது ஷமி, அல்ஜாரி ஜோசப் என்று நட்சத்திர பட்டாளத்தை கொண்டுள்ள குஜராத் அணி, பஞ்சாப்புக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் உத்வேகத்துடன் தயாராகி வருகிறது. 
 

Share this story