ஐபிஎல் கர்ஜனை : சென்னை-மும்பை இன்று மோதல்; ரசிகர்கள் பரபரப்பு..

By 
csk44

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று (சனிக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரங்கேறும் 12-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், மும்பை இந்தியன்சும் கோதாவில் குதிக்கின்றன.

தனது தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்திடம் தோற்ற சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் லக்னோவை 12 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முந்தைய ஆட்டத்தில் சென்னை பவுலர்கள் வைடு, நோ-பால் தாறுமாறாக வீசியதால் எரிச்சலடைந்த கேப்டன் டோனி கடுமையாக கண்டித்தார்.

இதனால் இன்றைய ஆட்டத்தில் சென்னை பவுலர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பந்து வீசுவார்கள் என்று நம்பலாம். வேகப்பந்து வீச்சாளர் தென்ஆப்பிரிக்காவின் சிசாண்டா மகாலா இணைந்திருப்பது சென்னையின் பந்து வீச்சுக்கு மேலும் வலு சேர்க்கும்.

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் பொல்லார்ட் கருத்து மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் நேற்று அளித்த பேட்டியில், 'பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் மோசமான தொடக்கம் கண்டாலும் அதன் பிறகு, சமாளித்து ஓரளவு நல்ல ஸ்கோரை எட்டினோம். இப்போது வான்கடேவுக்கு திரும்பி இருப்பதால் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்.

அணியில் ஓரிருவர் மட்டுமல்ல, அனைத்து பேட்ஸ்மேன்களும் ஆக்ரோஷமாக மட்டையை சுழற்ற வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான். சூர்யகுமார் யாதவின் பார்ம் குறித்து கவலைப்படவில்லை. அவரது திறமை மீது நம்பிக்கை இருக்கிறது. அதை களத்தில் நிரூபித்து காட்டுவார்' என்றார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-மும்பை மோதல் என்றாலே எப்போதும் அனல் பறக்கும். ரசிகர்களின் ஆர்வமும் எகிறும். இந்த ஆட்டமும் அதற்கு விதிவிலக்கல்ல. இவ்விரு அணிகளும் இதுவரை 34 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 20-ல் மும்பையும், 14-ல் சென்னையும் வெற்றி கண்டன.

ஐ.பி.எல். வரலாற்றில் சென்னைஅணி மும்பைக்கு எதிராகத்தான் அதிகமாக தோற்றிருப்பது கவனிக்கத்தக்கது. இதேபோல், மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மும்பைக்கு எதிராக 10 ஆட்டங்களில் ஆடியுள்ள சென்னை அணி அதில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அவர்களின் ஆதிக்கத்துக்கு சென்னை அணி முட்டுக்கட்டை போடுமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

ஆடுகளத்தை பொறுத்தவரை தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சு கொஞ்சம் எடுபடலாம். எப்படி என்றாலும் ரன்வேட்டைக்கு உகந்த வகையிலேயே ஆடுகளம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Share this story