கலாய்க்கிறதுக்கு ஒரு அளவே இல்லையா? : ஐபிஎல் அணிகளின் அலப்பறைகள்..

By 
slice

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோ- மும்பை அணிகள் மோதின. இதில் 81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று, நாளை நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் குஜராத்தை எதிர்கொள்ள தகுதி பெற்றது.

முன்னதாக இந்த ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், லக்னோவுக்காக விளையாடும் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக் மற்றும் இந்தியாவின் ஜாம்பவான் விராட் கோலி ஆகியோருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.

அந்த நிலையில் லக்னோவுக்கு எதிராக குஜராத் வென்றபோது ரசித் கான், சஹா ஆகியோர் சிறப்பாக விளையாடியதாக விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பாராட்டினார். இதற்கு மும்பைக்கு எதிராக பெங்களூரு தோல்வியை சந்தித்தபோது, அதை மாம்பழங்களை சாப்பிட்டுக்கொண்டே மகிழ்ச்சியுடன் பார்ப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிலடி கொடுத்தார்.

அப்படி விராட் கோலியை வம்பிழுத்த நவீனை இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வந்தனர். ஆனால் அவை அனைத்தையும் விட குஜராத்துக்கு எதிராக பெங்களூரு தோற்று லீக் சுற்றுடன் வெளியேறியபோது பிரபல ஆப்பிரிக்கன் பத்திரிக்கையாளர் அடக்க முடியாமல் சிரிக்கும் வீடியோவை பதிவிட்ட நவீன் சிரித்துக் கொண்டாடியது அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியது.

அந்த நிலையில் நேற்றைய போட்டியில் லக்னோ தோல்வியடைந்து வெளியேறியதால் மும்பை வீரர்கள் சந்திப் வாரியர், குமார் கார்த்திகேயா, விஷ்ணு வினோத் ஆகியோர் மேஜையில் 3 மாம்பழத்தை வைத்து "இனி வாழ்க்கையில் மாம்பழத்தை பார்க்க மாட்டேன், சாப்பிட மாட்டேன், பெயரைக் கூட கேட்க மாட்டேன்" என்ற வகையில் அமைதியாக இருக்கும் வழியை பாருங்கள் என நவீனுக்கு தக்க பதிலடி கொடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டனர். ஆனால் சில நேரங்கள் கழித்து அவர்கள் அதை டெலிட் செய்தனர்.

இருந்தாலும் அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்த ரசிகர்கள் அவரையும் லக்னோ அணியையும் கலாய்த்து தள்ளினர். அதனால் ஏற்பட்ட தொல்லையை தாங்க முடியாத லக்னோ நிர்வாகம் தனது ட்விட்டரில் மாம்பழம் சம்பந்தமான அனைத்து வார்த்தைகளையும் செட்டிங்கில் மியூட் செய்துள்ளது. 

 

Share this story