கபடி பயிற்சியாளர் உயிரிழப்பு : தமிழக அரசு நிதியுதவி..

By 
kabaddi5

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

குளித்தலை வட்டம் குளித்தலை குறுவட்டம் சத்தியமங்கலம் கிராமம் கணக்குப்பிள்ளையூரில் சிறுவர்கள் இடையேயான கபடி போட்டி (ஊர் சார்ந்த தனி விளையாட்டு குழு) விளையாட்டிற்கு வந்திருந்த சிறுவர்களை அழைத்து வந்த திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம்,

பாளையம் அஞ்சல் கரிச்சிகாரன் பட்டியைச் சேர்ந்த பயிற்சியாளர் மாணிக்கம் தங்கவேல் (வயது 26) என்பவர் சிறிது நெஞ்சுவலி இருந்தும் தொடர்ந்து பயிற்சி அளித்துள்ளார்.

போட்டியில் வெற்றி பெற்ற பிறகு நெஞ்சுவலி மிகுதியாக இருந்ததால் அவரை அய்யர்மலை தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த கபடி விளையாட்டு பயிற்சியாளரின் குடும்பத்தினர் மற்றும் அவரது மாணவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share this story