ஐதராபாத் வீரர்போல, மற்றவர்களும் வரவேண்டும் : விராட் கோலி
ஐ.பி.எல். போட்டியில், பரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 4 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது.
அபுதாபியில் நடந்த இந்த ஆட்டத்தில், முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்தது. இதனால், பெங்களூரு அணிக்கு 142 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஜேசன் ராய் அதிகபட்சமாக 38 பந்தில் 44 ரன் (5 பவுண்டரி), கேப்டன் வில்லியம்சன் 29 பந்தில் 31 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர்.ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டும், கிறிஸ்டியன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்தது. இதனால், அந்த அணி 4 ரன்னில் தோல்வியை தழுவியது.
13 ரன் :
தேவ்தத் படிக்கல் 41 ரன்னும், மேக்ஸ்வெல் 25 பந்தில் 40 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். புவனேஷ்வர்குமார் ஜேசன் ஹோல்டர், சித்தார்த் கவுல், உமரன் மாலிக், ரஷித்கான் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.
ஆட்டத்தின் கடைசி ஓவரில் பெங்களூர் அணியின் வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்டது. அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் களத்தில் இருந்தும் அந்த அணியால் வெற்றி முடியாமல் போனது ஏமாற்றமே.
கடைசி ஓவரை புவனேஷ்வர் குமார் மிகவும் நேர்த்தியாக வீசினார். அவர் 8 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
மேக்ஸ்வெல்-மாலிக் :
இந்த தோல்வியால் பெங்களூரு அணி 2-வது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு பறிபோனது. தோல்வி குறித்து, அந்த அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது :
தொடக்கத்திலே 3 விக்கெட் சரிந்ததால், மீண்டும் நிலை நிறுத்துவது முக்கியமானது.
படிக்கலும், மேக்ஸ்வெல்லும் அணியை முன்னேற்ற பாதைக்கு கொண்டு வந்தனர்.
சிறப்பாக ஆடி வந்த மேக்ஸ்வெல் ரன் அவுட் ஆனது, ஆட்டத்தின் திருப்பு முனையாகும். அதே நேரத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர்கள் கடைசி நேரத்தில் சிறப்பாக பந்து வீசினார்கள்.
ஐதராபாத் வீரர் உமரன் மாலிக் 153 கி.மீ. வேகத்தில் பந்து வீசியது பாராட்டுக்குரியது.
அவர் தனது திறமையை நன்றாக வெளிப்படுத்தினார். இதுபோன்ற வீரர்களின் திறமையை பார்க்கும் போது, அவர்களை மாதிரி மற்ற வீரர்களும் வர வேண்டும்.