பேட் கம்மின்ஸை ஓவர்டேக் செய்து, வரலாற்றை மாற்றி அமைத்து ஏலம் போன மிட்செல் ஸ்டார்க்..

By 
mit1

ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனுக்கான ஏலம் துபாயில் உள்ள கோகோ கோலா அரேனா அரங்கத்தில் நடந்து வருகிறது. இதில், ஒவ்வொரு அணியும் திறமை வாய்ந்த வீரர்களை தட்டி தூக்குவதில் போட்டி போட்டு வருகின்றன. இதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களது அணியை பலப்படுத்தும் நோக்கத்தில் பார்த்து பார்த்து ஒவ்வொரு வீரராக ஏலம் எடுத்து வருகிறது.

தற்போது வரையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் ரூ.6.80 கோடி, வணிந்து ஹசரங்கா ரூ.1.5 கோடி என்று ஏலம் எடுக்கப்பட்டிருந்த நிலையில், ஆஸ்திரேலியா அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் அதிகபட்சமாக ரூ.20.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இதன் மூலமாக ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். இதற்கு முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் அணியில் சாம் கரண் கடந்த சீசனில் ரூ.18.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் தான், இதையெல்லாம் ஓரங்கட்டும் வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலமாக வரலாற்றில் அதிக தொகைகு அதுவும் ரூ. 24.75 கோடிக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார்.

ஸ்டார்க்கை ஏலம் எடுக்க மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. பின்னர் இந்த இரு அணிகளும் ஏலத்திலிருந்து பின் வாங்க, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவியது. இறுதியாக ரூ.24.75 கோடி வந்ததுமே குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ரா போதும் போதும் இதோடு முடித்துக் கொள்ளுங்கள் என்று கையால் சைகை காட்டவே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ரூ.24.75 கோடிக்கு ஏலம் வாங்கியதாக அறிவிக்கப்பட்டார்.

நடந்து முடிந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பையில் 13 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றியிருந்த நிலையில், அவர் ஏன், இவ்வளவு தொகைக்கு ஏலம் எடுக்க்கப்பட்டார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா, டிராவிஸ் ஹெட், ஜெரால்டு கோட்ஸி, டேரில் மிட்செல் வணிந்து ஹசரங்கா ஆகியோர் குறைவான தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்படாத ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா அணி ஏன் இவ்வளவு தொகை கொடுத்து ஏலம் எடுத்தது என்பது புரியாத புதிராக உள்ளது.

இதற்கு முன்னதாக 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் கொல்கத்தா அணியில் இடம் பெற்று விளையாடிய ஸ்டார்க் 20 மற்றும் 14 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  கேகேஆர் அணியின் பர்ஸ் தொகை ரூ.32.7 கோடி. 4 வெளிநாட்டு வீரர்கள் உள்பட மொத்தம் 12 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட இருக்கின்றனர். ஸ்டார்க் தவிர இந்திய வீரர்களான சேத்தன் சகாரியா ரூ.50 லட்சம், விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் ரூ.50 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். தற்போது வரையில் ரூ.25.75 கோடி செலவு செய்துள்ளது. இன்னும், ரூ.6.95 கோடி மட்டும் பாக்கி இருக்கிறது.

ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள்:

மிட்செல் ஸ்டார்க் – ரூ.24.75 கோடி

கேஎஸ் பரத் – ரூ.50 லட்சம்

சேதன் சகாரியா – ரூ.50 லட்சம்

Share this story