ஒருநாள் கிரிக்கெட் தொடர் : ஆரம்பமே தமிழக அணி அமர்க்களம்..
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் மும்பை, கவுகாத்தி, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர் உள்பட 7 நகரங்களில் தொடங்கியது.
இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு, லீக்கில் மோதுகின்றன.
தகுதி :
லீக் சுற்று முடிவில் எலைட் ஏ, பி, சி, டி, இ ஆகிய பிரிவுகளில் முதலிடம் பிடிக்கும் 5 அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு முன்னேறும்.
பிளேட் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணி எலைட் பிரிவில் 2-வது இடம் பிடிக்கும் சிறந்த அணிகள் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் சந்திக்கும். இதில் வெற்றி பெறும் 3 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.
பேட்டிங் :
இந்த போட்டித் தொடரில், எலைட் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள 5 முறை சாம்பியனான தமிழக அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பையை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்த மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் பேட் செய்த தமிழக அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 290 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக, ஷாருக்கான 66 ரன்னும் (35 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்), பாபா இந்திராஜித் 45 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 34 ரன்னும், தினேஷ் கார்த்திக் 32 ரன்னும் சேர்த்தனர்.
மும்பை தரப்பில், தவால் குல்கர்னி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
54 ரன்கள் :
இதனை அடுத்து ஆடிய மும்பை அணி 46.4 ஓவர்களில் 236 ரன்னில் முடங்கியது. இதனால், தமிழக அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் ஷம்ஸ் முலானி 75 ரன்கள் எடுத்தார்.
தமிழக அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் வாஷிங்டன் சுந்தர், சித்தார்த் தலா 3 விக்கெட்டும், சாய் கிஷோர் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
*