ஷமி குணமடைந்து ஆரோக்கியம் பெற வாழ்த்து கூறிய பிரதமர் மோடி: வைரலாகும் பதிவு..

By 
shami6

முகமது ஷமிக்கு வெற்றிகரமாக குதிகால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து ஷமி விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா காயமடைந்த நிலையில், முகமது ஷமிக்கு அணியில் இடம் கிடைத்தது. இதையடுத்து அவர் 7 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுகள் கைப்பற்றி பல சாதனைகளை படைத்தார். நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 9 லீக் போட்டிகள் ஒரு அரையிறுதிப் போட்டி என்று எல்லாவற்றிலும் வெற்றி பெற்ற நிலையில் கடைசியாக இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது. உலகக் கோப்பையில் சிறப்பான பங்களிப்பை அளித்த நிலையில் முகமது ஷமிக்கு சிறந்த வீரருக்கான அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.

இந்த உலகக் கோப்பைத் தொடரைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்தார். ஆனால், அவர் பாதத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக முழு உடல் தகுதி பெறாத நிலையில் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து விலகினார். இதுவரையில் இந்த தொடரிலும் இடம் பெறாத ஷமி, வரும் மார்ச் மாதம் நடைபெறும் 17ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகியுள்ளார்.

மேலும், டி20 உலகக் கோப்பை தொடரில் ஷமி இடம் பெறுவது என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையில் தான் முகமது ஷமி தனது வலது அகில்லெஸ் தசைநார் காயத்திற்கு லண்டனில் நேற்று குதிகால் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் முகமது ஷமியின் புகைப்படங்களை பகிர்ந்து விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன். தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி முகமது ஷமி இல்லாத நிலையில் முகேஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோர் இடம் பெற்று விளையாடி வருகின்றனர்.

Share this story