2ஆவது முறையாக சாம்பியனான சன்ரைசர்ஸ்: வைரலாகும் நிகழ்வு..

By 
kavya1

தென் ஆப்பிரிக்காவின் எஸ்ஏ20 லீக் தொடரின் 2ஆவது சீசன் கடந்த ஜனவரி 10ஆம் தேதி முதல் பிப்ரவரி 10ஆம் தேதி நேற்று வரை நடந்தது. இதில், இடம் பெற்ற 6 அணிகளில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. 

இதில் நடந்த இறுதிப் போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியானது 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 56 ரன்களும், டாம் அபெல் 55 ரன்களும், கேப்டன் எய்டன் மார்க்ரம் 42 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் கடின இலக்கை துரத்திய டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சீனியர் வீரரான குயிண்டன் டி காக் 3 ரன்னிலும், ஜேஜே ஸ்முட்ஸ் 1 ரன்னிலும் பனுகா ராஜபக்‌ஷே ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ஹென்ரிஸ் கிளாசென் ரன் ஏதும் எடுக்கவில்லை. டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது 7 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் அடுத்தடுத்து 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியில் மார்கோ யான்சென் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலமாக சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியானது 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக எஸ்ஏ20 லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியானது தொடர்ந்து 2ஆவது முறையாக சாம்பியனானது.

தென் ஆப்பிரிக்காவில் நடந்த எஸ்ஏ20 லீக் தொடரின் 2ஆவது சீசனில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியானது சாம்பியனானதைத் தொடர்ந்து அதனுடைய உரிமையாளர் காவ்யா மாறன் உற்சாகத்தில் துள்ளி குதித்து ஆரவாரம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். தொடர்ந்து 2ஆவது முறையாக டிராபியை வென்றுள்ளோம். இது மறக்க முடியாத நிகழ்வு என்று கூறியுள்ளார்.

Share this story