தமிழ்நாடு வாலிபால் லீக் நாளை தொடக்கம்..

By 
v9

தமிழ்நாடு வாலிபால் சங்கம் சார்பில் முதலாவது தமிழ்நாடு வாலிபால்லீக் போட்டிகள் நாளை (3-ம் தேதி) தொடங்குகின்றன. வரும் 12-ம் தேதி வரை சென்னை மைலாப்பூரில் உள்ள சாந்தோம் உயர் நிலைப்பள்ளியில் உள்ள உள்ளரங்க விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இந்தத் தொடரில் சென்னை ராக்ஸ்டார்ஸ், விழுப்புரம் சூப்பர் கிங்ஸ், கிருஷ்ணகிரி புல்ஸ், விருதுநகர் கிங்மேக்கர்ஸ், குமரி பீனிக்ஸ், கடலூர் வித் அஸ் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த லீக்கில் கலந்து கொள்ளும் அணிகளில் அரசு துறையை சேர்ந்த 4 வீரர்கள், மற்ற மாநிலங்களைச் சேர்ந்த 2 வீரர்கள், கல்லூரி மாணவர்கள் 7 பேர், ஒரு பள்ளி மாணவர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இந்தத் தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.10 லட்சம் ஆகும். போட்டிகள் ரவுண்ட்ராபின் முறையில் நடத்தப்பட உள்ளன.

லீக் சுற்றில் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்று ஆட்டத்தில் மோதும். இந்த ஆட்டம் 11-ம் தேதி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப் போட்டியில் கால்பதிக்கும்.

நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை ராக்ஸ்டார்ஸ் - கடலூர் வித் அஸ் அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து இரவு 8 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் கிருஷ்ணகிரி புல்ஸ் - விழுப்புரம் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Share this story