U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்தியா தோல்வி.. ஆஸ்திரேலியா அணி சாம்பியன்..

By 
auu1

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின்  இறுதி ஆட்டத்தில் 79 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

15-வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது.16 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. 

இந்நிலையில் பெனோனியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்தது. ஹர்ஜஸ் சிங் 55 ரன்களும், கேப்டன் ஹக் வெய்ப்ஜென் 48 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் ராஜ் லிம்பானி 3 விக்கெட்களையும், நமம் திவாரி 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதையடுத்து 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கம் முதலே இந்திய அணி வீரர்கள் திணறினர். இந்திய வீரர்கள் பலரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில்  43.5 ஓவர்களில் 174 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 79 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியா அணி இதுவரை நான்கு முறை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Share this story