கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகல்?
20 ஓவர் உலக கோப்பை தொடருக்குப் பிறகு, தனது பதவி விலகல் முடிவை விராட் கோலி அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்து வரும் விராட் கோலி, விரைவில் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பை துறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேட்டிங்கில் கவனம் :
தனது பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும் நோக்கில், விராட் கோலி இத்தகைய முடிவு எடுக்க இருப்பதாக பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் பிசிசிஐ வட்டார தகவல் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் விராட் கோலி தொடர்ந்து நீடிப்பார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
பணிச்சுமை :
அக்டோபர் -நவம்பர் மாதத்தில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை தொடருக்குப் பிறகு, தனது பதவி விலகல் முடிவை விராட் கோலி அறிவிக்க இருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
33-வயதாகவும் விராட் கோலி உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளங்கி வருகிறார்.
மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருப்பதால், ஏற்பட்டு இருக்கும் பணிச்சுமையை குறைக்கும் வண்ணம் விராட் கோலி, ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பை துறக்கலாம் என்று தெரிகிறது.
விராட் கோலி தலைமையில், இந்திய அணி 95 போட்டிகளில் விளையாடி 65-ல் வெற்றியும் 27-ல் தோல்வியும் அடைந்துள்ளது. 1 போட்டி டிராவில் முடிந்துள்ளது. 2 போட்டிகளில் முடிவு இல்லை.