கேப்டன் பதவியில் இருந்து விலக, விராட்கோலி மறுப்பு : கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவு
2023-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் போட்டி உலக கோப்பையை கருத்தில் கொண்டு, இந்திய அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.
இதைத்தொடர்ந்து கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுமாறு, விராட் கோலியை கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி வந்தது.
ஆனால், அவர் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக மறுத்து விட்டார்.
48 மணிநேரம் கெடு :
இதைத்தொடர்ந்து, கேப்டன் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரோகித்சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
விராட் கோலி தானாக முன்வந்து ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் விரும்பியது. இதற்காக அவருக்கு 48 மணி நேரம் கெடு விதிக்கப்பட்டது.
ஆனால், கோலியோ கேப்டன் பதவியை விட்டுச் செல்ல விரும்பவில்லை. கிரிக்கெட் வாரியத்தின் கெடுவை நிராகரித்தார்.
ரோகித் சர்மா :
இதைத்தொடர்ந்து, 49-வது மணி நேரத்தில் ரோகித் சர்மாவை கேப்டனாக நியமித்து, கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவை எடுத்தது. விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது. கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் இந்த தகவலை தெரிவித்தது.
மேலும், கேப்டன் பதவியில் விராட் கோலியின் செயல்பாடுகள் தொடர்பாக, பல்வேறு அதிருப்திகள் தெரிவிக்கப்பட்டன.
தொடக்கத்தில், நன்றாக இருந்த அவர் போகப்போக தனது அதிகார போக்கை கடைபிடித்ததாக தெரிகிறது. அவரால் குல்தீப் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், இந்திய அணியில் பிளவு இருந்ததாகவும் இதற்கு கோலியின் ஆதிக்கம்தான் காரணம் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான், அவரது கேப்டன் பதவி பறிக்கப்பட்டு உள்ளதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
*