ஒரே இரவில் மோசமான அணியாக மாறிவிட்டோம்: இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் வேதனை

By 
jos1

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 25-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி இலங்கை நடப்பு தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. அதேநேரம், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து சந்திக்கும் நான்காவது தோல்வி இதுவாகும்.

இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களம் கண்டது இங்கிலாந்து. இந்தத் தொடரில் ஏற்கனவே இங்கிலாந்து அணி 4 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 3 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தோல்வியை தழுவிய இங்கிலாந்து, வங்கதேச அணிக்கு எதிராக மட்டும் வெற்றிபெற்றது. நேற்றைய போட்டியிலும் இங்கிலாந்து மோசமாகவே விளையாட தற்போது மீண்டுமொரு தோல்வியை சந்தித்துள்ளது. போட்டிக்கு பின் பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர், "ஒரே இரவில் மோசமான அணியாக மாறிவிட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில், "இது நம்ப முடியாத அளவுக்கு கடினமானது. எனினும், இந்த தோல்விக்கு, அணியின் கேப்டனாக நான் மிகவும் வருந்துகிறேன். எங்களிடம் நிறைய அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்தும், எங்களால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாதது ஏமாற்றமளிக்கிறது. ஒரே இரவில் மோசமான அணியாக மாறிவிட்டோம். அதுதான் எங்களின் விரக்தி.

இத்தொடரில் இதுவரை எங்களது சிறப்பை நாங்கள் வெளிப்படுத்தவில்லை. ஆட்டத்தில் நாங்கள் இதுபோன்ற தவறுகள் வெளிப்படுத்தி இதுவரை பார்த்ததில்லை. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சரியாக செயல்படவில்லை. மீதமுள்ள போட்டிகளில் நன்றாக விளையாட விரும்புகிறோம். எதுவாக இருந்தாலும் இருக்கும்." என ஜாஸ் பட்லர் வேதனையுடன் கூறினார்.

Share this story