யூ டியூப் பார்த்து, குழந்தை பெற்ற 17 வயது மாணவி : பெற்றோர் அதிர்ச்சி
அந்தச் சிறு பெண்ணுக்கு 17 வயதுதான் ஆகிறது. 11-ம் வகுப்பு படிக்கிறார்.
கடந்த சில நாட்களாக, அடிக்கடி வீட்டின் மேல் மாடிக்கு செல்வதும், பின்னர் இறங்குவதுமாக இருந்தார். பதற்றமாகவும் இருந்தார். ஆனால், முகத்தில் தெளிவு இருந்தது.
குழந்தை அழும் சத்தம் :
அவரது தாயார் என்னமோ ஏதோ என நினைத்தார். பல முறை அவரிடம் கேட்டார், ஆனால், அந்த சிறு பெண் எதுவும் கூறவில்லை.
இப்படி 2 மூன்று நாட்கள் சென்றன. திடீரென ஒரு நாள், மேல் மாடியில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. உடனே பெற்றோர், அங்கு மாணவியின் அறைக்குள் சென்று பார்த்தபோது, அங்கு அழகிய குழந்தை ஒன்று இருப்பதை கண்டனர்.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மாணவியிடம் விசாரித்தனர்.
அடிக்கடி சந்திப்பு :
மாணவியின் வீடு அருகே உள்ள 21 வயது வாலிபர் ஒருவரின் காதல் வலையில் சிக்கி கர்ப்பமாகி உள்ளார்.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டனர். அப்போது வாலிபர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார்.
இதை நம்பிய மாணவியும் அந்த வாலிபருடன் உல்லாசமாக இருந்தார். இதில், அவர் கர்ப்பம் அடைந்துள்ளார்
மாணவி, இத்தகவலை பெற்றோரிடம் கூறாமல் மறைத்து விட்டார். அதே நேரம் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று மட்டும் கூறியுள்ளார்.
பெற்றோரும் அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு சிகிச்சை அளித்த ஆஸ்பத்திரிகளில் மாணவி கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடிக்கவில்லை.
ஆன்லைன் வகுப்பு :
கர்ப்பமானதும் ஆன்லைன் வகுப்பு இருப்பதாக கூறி, மாணவி அவரது அறையிலேயே அதிக நேரம் இருந்துள்ளார்.
கடந்த 20-ந்தேதி மாணவிக்கு பிரசவ வலி வந்தது. என்ன செய்வது என்று யோசித்த மாணவி, பிரசவம் பார்ப்பது எப்படி? என்பது பற்றி யூ டியூப்பில் பார்த்து உள்ளார்.
பின்னர், அவர் வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்று கதவை உட்பக்கமாக பூட்டிக் கொண்டார். அங்கு யூடியூப்பில் உள்ள உதவிக் குறிப்புகளின் அடிப்படையில், அவர் தனக்குத்தானே பிரசவம் பார்த்துள்ளார்.
இதில், அவருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது.
போக்சோ சட்டம் :
குழந்தை பிறந்த பின்பு, மாணவியே தனது தொப்புள் கொடியை அறுத்து, குழந்தையை எடுத்துள்ளார். இதைக் கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர், அவரை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது மாணவியும், அவரது குழந்தையும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து, ஆஸ்பத்திரி அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் மாணவியிடமும், அவரின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தினர். பின்னர், மாணவியை கர்ப்பம் ஆக்கிய வாலிபரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
இந்த சம்பவம், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், கோட்டக்கல் பகுதியில் நடந்துள்ளது.
தாயார் பார்வைக் குறைபாடு உடையவர். தந்தை, தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிகிறார்.
கழிப்பறையில் பிரசவம் :
ஒரு மாதத்திற்கு முன்பு, செப்டம்பரில், இது போல் ஒரு மாணவி கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் கழிப்பறையில், குறைமாத குழந்தையைப் பெற்றெடுத்தார்.
மாணவியை கர்ப்பமாக்கிய 20 வயது வாலிபர் மீது, போலீசார் போக்சோ வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.