பட்டாசு எடுத்துச் சென்றால், 3 ஆண்டு சிறை : ரயில்வே பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

By 
3 years imprisonment for taking away firecrackers Railway Safety Warning

தீபாவளி சமயத்தில் பட்டாசு வாங்குபவர்கள், அவற்றை பாதுகாப்பான முறையில் எடுத்துச்செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை ரயிலில் கொண்டு செல்லக்கூடாது என்று ஏற்கனவே தடை உள்ளது. இதையும் மீறி ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே பாதுகாப்பு படையினர் எச்சரித்து உள்ளனர்.

இதுதொடர்பாக ரயில்வே பாதுகாப்புத் துறையினர் கூறி யிருப்பதாவது :

பயணிகள் யாரும் ரயில்களில் பட்டாசு எடுத்துச்செல்லக்கூடாது. மீறி, பட்டாசு எடுத்துச் செல்வது கண்டுப்பிடிக்கப்பட்டால், ரயில்வே சட்டத்தின் கீழ், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

மின்சார ரயில்களில் கூட்ட நெருக்கடியால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்க, பட்டாசு எடுத்துச் செல்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில், அக்டோபர் 30-ந் தேதி முதல் நவம்பர் 5-ந் தேதி வரை சென்னை புறநகர் மின்சார ரயில்களிலும், விழுப்புரம், அரக்கோணம், கும்மிடிப்பூண்டிக்கு இயக்கப்படும் ரயில்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புறநகர் ரெயில் நிலையங்களில் 24 மணி நேரமும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் இருப்பர். ரயில் நிலையங்களின் நுழைவு வாயில்களில் ரயில்வே பயணிகளின் உடைமைகளை சோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளனர்.

Share this story