68,000 பேர் கண்டு களித்த தீவுத்திடல் கண்காட்சி, நாளை மறுநாள் முடிகிறது..

By 
exhi3

சென்னை தீவுத்திடலில் சுற்றுலா துறை சார்பில் சர்வதேச கைத்தறி மற்றும் கைவினைப் பொருள்கள் கண்காட்சி கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி தொடங்கியது. இந்த கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த கண்காட்சியில் 10 வெளிநாடுகளை சேர்ந்த கைவிணை கலைஞர்கள் தங்களது நாட்டு பொருட்களை 30 அரங்குகளில் காட்சிப்படுத்தி உள்ளனர். மேலும் இந்தியாவில் உள்ள 20 வெளி மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் தங்களது படைப்பு களை 83 அரங்குகளில் விற்பனைக்கு வைத்து உள்ளனர்.

தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்த நெசவு துணி வகைகள், பட்டுச் சேலைகள், கைத்தறி கூட்டுறவு சங்கத்தின் கோ-ஆப்டெக்ஸ் துணி வகைகள், பூம்புகார் கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை 70 அரங்குகளில் உள்ளன. இந்த கண்காட்சியில் மொத்தம் 311 அரங்குகள் இடம்பெற்றுள்ளன.

இந்த கண்காட்சியில் காஞ்சிபுரம், ஆரணி, திருப்புவனம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பட்டுச் சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், ராசிபுரம் தாழம்பூ கோர்வை பட்டு அலங்கார துணி வகைகள் போன்றவை உள்ளன. கைவினைப் பொருட்களில் தஞ்சாவூர் ஓவியங்கள், மரச்சிற்பங்கள், பெண்களுக்கான அணிகலன்கள், இயற்கை மூலிகை பொருட்கள் என ஏராளமான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

இந்த கண்காட்சியுடன் உணவுத்திருவிழாவும் நடைபெற்று வருகிறது. இதற்கான 30 உணவு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் மாலை வேளையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கண்காட்சியை இதுவரை 68 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளார்கள்.

இந்த காண்காட்சி நாளை மறுநாள் (21-ந் தேதி) முடிவடைகிறது. காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த கண்காட்சியை பார்வையிடலாம்.
 

Share this story