94 யூடியூப் சேனல்கள் முடக்கம் : மத்திய அரசு தகவல்
நாடாளுமன்ற மேல் சபையில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது :
நாட்டின் இறையாண்மைக்கு எதிராக போலி செய்திகளையும் தவறான பிரசாரங்களையும் செய்யும் அமைப்புகள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கிறது.
அந்த வகையில், 2021 - 22ம் ஆண்டில் தவறான தகவல்களையும், போலி செய்திகளையும் வெளியிட்ட, 94 யூடியூப் சேனல்கள், 19 சமூக வலைதள கணக்குகள், 747 வலைதள முகவரிகள் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன. தகவல் தொழில்நுட்ப சட்டம், 69 - ஏ பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொடர்பான போலி செய்திகளை கண்டறிந்து உண்மை தகவல்களை தெரிவிக்க பத்திரிகை தகவல் மையத்தில் தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பிரிவு, 34 ஆயிரத்து 125 விசாரணைகளுக்கு பதில் அளித்துள்ளது.
சமூக வலைதளங்களில் வெளியான, 875 போலி செய்திகளையும் அம்பலப்படுத்தியுள்ளது' என அதில் கூறப்பட்டுள்ளது.
*