பாஜக அரசின் பரிசுதான், பிஎஃப் வட்டி விகிதம் குறைப்பு : காங்கிரஸ் விமர்சனம்

By 
epfo

2021-22ம் நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 8.50 சதவீதத்தில் இருந்து 8.10 சதவீதமாக குறைக்கப்படுகிறது. 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் மத்திய வாரிய குழு கூட்டத்தில் இதற்கான முடிவு செய்யப்பட்டுள்ளது.

1977-78-ம் ஆண்டிற்கு பிறகு, தொழிலாளர் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் இப்போது குறைக்கப்படுவதால், சந்தாதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். வட்டி விகிதத்தை குறைக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். மத்திய அரசின் இந்த முடிவை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. 

பரிசு இது :

4 மாநில தேர்தல் வெற்றிக்கு பாஜக அரசின் பரிசே பி.எஃப் வட்டி விகிதம் குறைப்பு என காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.  

நாட்டின் 84 சதவீத மக்களின் வருமானம் குறைந்துள்ள நிலையில், கோடிக்கணக்கான ஊழியர்களின் சேமிப்பு மீது தாக்குதல் நடத்துவது சரியா? என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளருமான ரன்தீப் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார். 

மறுபரிசீலனை :

பி.எஃப். வட்டி விகிதத்தைக் குறைக்கும் மத்திய அரசின் முடிவை, மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, இந்திய கம்யூ. எம்.பி. பினோய் விஸ்வம் கடிதம்  எழுதியுள்ளார். 

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 4 மாநிலங்களில் தேர்தல் வெற்றியைப் பெற்ற பிறகு, பாஜக தலைமையிலான அரசாங்கம் அதன் உண்மையான நிறத்தை காட்டுவதாக விஸ்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

பிஎஃப் வட்டி விகிதக் குறைப்பு தொடர்பாக, மோடி தலைமையிலான மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக தாக்கியுள்ளது. 

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மத்திய அரசு உழைக்கும் மக்கள் மீது, மேலும் தாக்குதல்களை அதிகரித்துள்ளதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.
*

Share this story