சென்னையில், சுப்ரீம் கோர்ட் கிளை : முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை
தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளி விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் கொண்டப்பட்டது.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சுப்ரீம் கோர்ட்டு' நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், ஐகோர்ட்டு நீதிபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், ஆணையம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கி கெளரவித்தார்.
மேலும், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது.
பின்னர், இந்த விழாவில் பேசிய முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது :
'கலைஞர் தொடங்கி வைத்த மாநில மனித உரிமை ஆணைய வெள்ளி விழாவை இன்று கொண்டாடுகிறோம்.
மாநில மனித உரிமைகள் ஆணையம் உருவாக காரணமாக இருந்தவர் கலைஞர்.மனிதரின் உரிமைகள், பண்புகள், காக்கப்பட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்போம்.
மனித உரிமைகளை காப்பதில் ஒருநாளும் தவற மாட்டோம். மனித உரிமை ஆணையத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
மாநில மனித உரிமை ஆணையத்தின் இணையதளம் தமிழில் உருவாக்கப்படும். கொள்கை கோட்பாடுகள் குறித்து அனைவரும் அறிய பயிற்சி முகாம் ஏற்படுத்தப்படும்.
சுப்ரீம் கோர்ட்டு ,ஐகோர்ட்டு நீதிபதிகள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் சில கோரிக்கைகளை முன்வைக்கிறேன்.
சுப்ரீம் கோர்ட்டு கிளை சென்னையில் அமைய ஏற்பாடு செய்ய வேண்டும்' என்றார்.
*