தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் : வானிலை மையம் எச்சரிக்கை

By 
rain16

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செந்தாமரைக்கண்ணன் கூறியதாவது:-

தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை (5-ந்தேதி) தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி-மின்னலுடன் லேசான மழையும் பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

6-ந்தேதி செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும். 7, 8-ந்தேதிகளில் தமிழகத்தில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்ப நிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

Share this story