மதுரையில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதியுதவி : தமிழக அரசு 
 

By 
tamilnadu

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :

மதுரையில் இன்று காலை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கிய நிகழ்வைக் காணும் பொருட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். கொரோனா பாதிப்பால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின், இந்த வைபவம் நடப்பதால், பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்ட நிலையில், 

இன்று காலை அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் பங்குபெற்று, திரும்பும் வேளையில் கூட்டநெரிசலில் சிக்கி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உயிரிழந்துள்ளனர். 

மேலும் ஒருவர் பலத்த காயங்களுடனும், 7 பேர் சாதாரண காயங்களுடனும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தத் துயர சம்பவத்தை அறிந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மிகவும் வேதனையுற்று, உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதோடு, 

இச்சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கும் தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து உடனடியாக நிவாரணம் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share this story