ஒரு லட்சம் விவசாயிகளுக்கு, இலவச மின் இணைப்பு : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
ஓராண்டுக்குள் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கி, தமிழக அரசு சாதனை படைத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், ஓராண்டிற்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்திருந்தார்.
இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உளுந்தூர் பேட்டையைச் சேர்ந்த கண்ணன் என்ற விவசாயிக்கு, ஒரு லட்சமாவது மின் இணைப்பு ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தொடர்ந்து, மின் இணைப்பு பெற்ற பல்வேறு மாவட்ட விவசாயிகளிடம் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.
இதனையடுத்து, நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை பாராட்டினார்.
உழவர்களுக்கு முன்னுரிமை தரும் அரசாக என்றும் திமுக அரசு செயல்படும் என்று தெரிவித்த அவர், ஓராண்டு முடிவதற்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கி, தமிழக அரசு சாதனை படைத்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.