அக்னிபாத் வீரர்களுக்கு, புதிய சலுகைகள் - தொடரும்  அரசு பணி..
 

By 
agni6

மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள அக்னிபாத் திட்டத்திற்கு பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த திட்டத்தில் இணைந்து பணியாற்றும் இளைஞர்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. 

அதன்படி, அக்னிபாத் திட்ட வீரர்கள் பணி நிறைவுக்கு பிறகு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகங்களின் பணிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அக்னிபாத் ஆள்சேர்ப்பு திட்டத்தின் கீழ், பணியாற்றி பதவி காலம் நிறைவு பெறும் வீரர்களுக்கு, கர்நாடகா மாநில காவல்துறையில் பணி வழங்கப்படும் என்று அம்மாநில உள்துறை  அமைச்சர், அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா மாநிலம் தார்வாட்டில் போராட்டம் நடத்த முயன்றவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். 

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலாபவன் பகுதியில் கூடி போராட்டம் நடத்த முயன்றவர்கள் விரட்டப்பட்டதாகவும் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
*

Share this story