தாலி கட்டும் நேரத்தில் மணமகன் ஓட்டம் : போலீசார் விசாரணை

By 
marriage1

நெல்லிக்குப்பம் அடுத்த குமிழி, மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கும் செங்கல்பட்டை அடுத்த மெய்யூரைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இன்று திருமணம் செய்ய இருவீட்டாரும் முடிவு செய்து இருந்தனர்.

அவர்களது திருமணம் திருப்போரூரை அடுத்த கொட்டுமேடு கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. இதையொட்டி நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் இருவீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இரவு 11 மணி வரை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணமகன் சதீஷ்குமார், மணமகளுடன் சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். பின்னர் சதீஷ்குமார் மணமகன் அறைக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் இன்று காலை திருமணத்திற்கு சடங்குகள் செய்வதற்காக மணமகன் அறைக்கு சென்று சதீஷ்குமாரை அழைத்து வர உறவினர்கள் சென்றனர். ஆனால் சதீஷ்குமார் அங்கு இல்லை. அவருடன் இருந்த நண்பர்களும் மாயமாகி இருந்தனர்.

மணமகன் சதீஷ்குமார் ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது. இதனால் மணப்பெண்ணும், திருமணத்துக்கு வாழ்த்த வந்த உறவினர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சதீஷ்குமாரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. இதனால் புதுமண ஜோடியை வாழ்த்த வந்த உறவினர்கள் கவலையுடன் திரும்பினர். திருமணம் நின்று போனதால் திருமண மண்டபம் களை இழந்தது. மணமகளுக்கு ஆறுதல் கூற முடியாமல் உறவினர்கள் சோகம் அடைந்தனர்.

திருமண மண்டபத்தில் மணமகன் சதீஷ்குமாருக்கு சீதனமாக கொடுப்பதற்காக விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது. மணமகன் ஓட்டம் பிடித்து இருப்பது குறித்து திருப்போரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தாலி கட்டும் நேரத்தில் மணமகன் ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this story