அறிவியல் துறையில் இந்தியா : பிரதமர் மோடி பெருமிதம்

By 
science3

நாட்டில் உள்ள விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் பங்கேற்கும் இந்திய அறிவியல் மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். முதல் மாநாடு 1914ம் ஆண்டு நடைபெறுகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக மாநாடு நடத்தப்படவில்லை. இந்தநிலையில் 108வது இந்திய அறிவியல் மாநாடு மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று முதல் வருகிற 7-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

பெண்களுக்கு அதிகாரமளித்தலுடன் நிலையான வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்ற கருத்தை அடிப்படையாக வைத்து இந்த மாநாடு நடத்தப்படுகிறது. 108-வது இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

விஞ்ஞானம், தொழில்நுட்பத்தால் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தால் இந்தியா வளர்ச்சி பெறுகிறது. நோய்களில் இருந்து மக்களை காப்பாற்ற புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். பெண்களுக்கு தொழில்நுட்பம் உதவியாக இருந்துள்ளது. மக்களுக்கு பயன்படாவிட்டால் புதிய கண்டுபிடிப்புகளாலும் பலன் இருக்காது.

அறிவியல் துறையில் இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்தியா இன்று முன்னேற்றத்திற்காக அறிவியல் வழிகளை பயன்படுத்துகிறது. இதனால் 130 நாடுகள் பட்டியல் 2015-ல் 81-வது இடத்தில் இருந்த இந்தியா உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் 40-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

அறிவியலில் வளர்ச்சி என்பது இந்தியாவின் தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாக கொண்டு இருக்க வேண்டும். இது நமது விஞ்ஞான சமூகத்துக்கு உத்வேகமாக இருக்க வேண்டும். இந்தியாவில் அறிவியல் இந்தியாவை தன்னிறைவு அடைய செய்வதை நோக்கமாக கொண்டு இருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
 

Share this story