இன்றைய குரூப்-4 தேர்வு பற்றி, டிஎன்பிஎஸ்சி மற்றும் தேர்வர்களின் தகவல்கள்..

By 
group1

குரூப்-4 பதவிகளில் வரும் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்பட 7 ஆயிரத்து 301 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது. 

இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 ஆண்கள், 12 லட்சத்து 67 ஆயிரத்து 457 பெண்கள், 131 திருநங்கைகள் என மொத்தம் 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 

இதற்கான தேர்வு இன்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்றது. 

தமிழகம் முழுவதும் 316 தாலுகா மையங்களில் உள்ள 7 ஆயிரத்து 689 தேர்வு மையங்களில் இந்த தேர்வு இன்று நடைபெற்றது. தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வர அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். 

9 மணிக்கு ஓ.எம்.ஆர். விடைத்தாள்கள் தேர்வர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக அறிவுறுத்தப்பட்டு இருந்தது. 

9 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்தது. 

இந்நிலையில், இந்த குரூப் 4 தேர்வை 84 சதவீதம் பேர் எழுதியுள்ளனர். 

மொத்தம் 22 லட்சம் பேர் விண்ணப்பித்ததில் 18.50 லட்சம் பேர் தேர்வை எழுதியதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 

இத்தேர்வில், கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டு பகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள் எளிமையாக இருந்ததாகவும், பொது அறிவு பகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக இருந்ததாகவும் தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

மேலும், தேர்வுக்காக கொடுக்கப்பட்ட 3 மணி நேரம் போதவில்லை என்றும் தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். 

யுபிஎஸ்சி தேர்வுக்கு கேட்கப்படும் கேள்விகள் போல் மறைமுக வினாக்கள் அதிகம் கேட்கப்பட்டதாகவும் தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். 

திருமண உதவித் தொகை திட்டம் பற்றிய கேள்வியால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகை திட்டம், உயர்கல்வி உறுதித்திட்டமாக மாற்றப்பட்ட நிலையில், அது தொடர்பாக குரூப் 4 தேர்வில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. 

8-ம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகை யாருடைய பெயரில் தமிழக அரசால் வழங்கப்படுகிறது? என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. 

அரசால் கைவிடப்பட்ட திட்டம், செயல்பாட்டில் உள்ளது போல் கேட்கப்பட்ட கேள்வியால் தேர்வர்கள் குழப்பம் அடைந்ததாக தெரிவித்துள்ளனர்.
*

Share this story