மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய திட்டம் : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

By 
stalinji3

சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-

அரசின் பயனானது அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அதிலும் குறிப்பாக விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு உறுதியாக கிடைக்க வேண்டும். அரசின் கவனம் மிகுதியாக தேவைப்படுவோரில் குறிப்பிடத்தக்க பிரிவினர் மாற்றுத் திறனாளிகள்.

இவர்களின் உரிமைகளை காக்கவும் அவர்கள் சமுதாயத்தில் சமநிலையில், சுயமரியாதையுடன் வாழும் நிலையினை உறுதி செய்யவும் 2011-ம் ஆண்டில் தலைவர் கலைஞரால் இது தனித்துறையாக உருவாக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் தன்னிச்சையாகவும் பிறரைச் சார்ந்து இல்லாமலும் சமுதாயத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று இந்த அரசு கருதுகிறது.

எனவே தான், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு வேலைவாய்ப்புகளில் 4 விழுக்காடு இட ஒதுக்கீடும், தனியார் துறைகளிலும் வேலைவாய்ப்பினை ஏற்படுத்த அவர்களுக்கு உகந்த பணியிடங்களைக் கண்டறிய வல்லுநர் குழு அமைத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாவட்ட அளவில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கு சரியான முறையில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய, உயர்மட்டக் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாற்றுத் திறனாளிகளுக்கு பொது இடங்களில் தடையற்ற சூழலை அமைக்கும் நடவடிக்கையாக, சாய்தள பாதை, மின்தூக்கி பொருத்துதல், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை, பார்வையற்றோர் பயன்பாட்டிற்காக தரைத்தளங்களில் அமைக்கப்பட்டு உள்ளன. செவித்திறன் குறைபாடு உடையோருக்கு தகவல் பரிமாற்றம் செய்ய தகவல் பலகைகள், சைகை மொழி பெயர்ப்பாளர்கள் நியமனம் போன்ற வசதிகள் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

"18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடைய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் உலக வங்கி நிதியுடன் ஆயிரத்து 763 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கப்பட உள்ளன. அடுத்த 6 ஆண்டுகளில், அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

மாற்றுத்திறனாளிகளின் திறன் மேம்பாடு மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான பயிற்சியும், அரசின் தற்போதுள்ள திட்டங்களுடன் ஒருங்கிணைத்து இதர அரசுத்துறைகளின் மூலம் தொழில்திறன் பயிற்சியும் அளிக்கப்படும்.

"சமூகப் பதிவு அமைப்பு" மூலம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள், பராமரிப்பாளர்களுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான பயன்களை அடையாளம் காணுதல், தேர்வு செய்தல் மற்றும் வழங்குதல் ஆகியவை உறுதி செய்யப்படும்.

இப்படி ஏராளமான திட்டங்களை கலைஞர் வழியில், நமது அரசு செயல்படுத்தி வருகிறது. இன்னும் நிறைய திட்டங்களை செயல்படுத்த காத்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
 

Share this story