ராணி எலிசபெத் உடல் இன்று நல்லடக்கம் : உலக தலைவர்கள் இறுதி அஞ்சலி

By 
elizab1

ராணி எலிசபெத் (96) உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 8-ஆம் தேதி காலமானாா். அவரது உடல் லண்டனில் நாடாளுமன்ற வெஸ்ட்மின்ஸ்டா் அரங்கில் அஞ்சலிக்காக கடந்த புதன்கிழமை முதல் வைக்கப்பட்டிருந்தது.

கடந்த ஐந்து நாள்களாக லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில், சுமாா் 17 மணி நேரம் வரை கடும் குளிரிலும் காத்திருந்து அரசியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர்.

ராணியின் எட்டு பேரக் குழந்தைகளும் அவரது உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டியின் அருகேயே இருந்து வந்தனர். ராணியின் மறைவுக்கு பிரிட்டன் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இறுதிச்சடங்கு நடைபெறும் திங்கள்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு தொலைக்காட்சிகளிலும், பொது இடங்களில் அகண்ட திரைகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நாடு முழுவதும் காவல் துறை அதிகாரிகள் அனைவரும் திங்கள்கிழமை பணிக்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

புதிய அரசா் சாா்லஸின் மனைவியான கமீலா வெளியிட்ட விடியோ செய்தியில், 'ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் உலக அரங்கில் ராணி எலிசபெத் தனிச் சிறப்புடன் செயல்பட்டாா். அவரது புன்னகையை எப்போதும் நினைவில் கொண்டிருப்பேன்' எனத் தெரிவித்தாா்.

ராணியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் உலக நாடுகளைச் சோ்ந்த 500 தலைவா்கள் லண்டனுக்கு வருகை தந்துள்ளனா்.

இறுதிச்சடங்கில் பொதுமக்கள் 10 லட்சம் போ் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலுமிருந்து 250 கூடுதல் ரயில்கள் லண்டனுக்கு இயக்கப்பட்டன. இறுதிச்சடங்கின்போது ஒலித் தொந்தரவுகளைத் தடுக்கும் வகையில், ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்படும், வருகை தரும் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில், வெஸ்ட்மின்ஸ்டர் அபே-க்கு கொண்டு வரப்பட்ட ராணி எலிசபெத் உடலுக்கு உலக தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு உலக தலைவர்கள் இறுதிப்பிரியாவிடை தரும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் மதக் கூட்டம் நடைபெறுகிறது. இதன் பிறகு இறுதிப் பயணம் வின்ட்சர் கோட்டையை நோக்கிச் செல்லும். அங்கு ராணியின் குடும்ப உறுப்பினர்கள் இறுதிப் பிரியாவிடை அளிப்பார்கள். பின்னர் ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

Share this story