ரூ.3,700 கோடி சொத்துகள் மீட்பு : அமைச்சர் சேகர்பாபு தகவல்
 

By 
babu

இந்து சமய அறநிலைய துறை சார்பில் நெல்லையப்பர் கோவிலில் ரூ.4.03 கோடி மதிப்பிலான திருப்பணிகள் தொடக்க விழா நெல்லையப்பர் கோவில் வசந்த மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் புனரமைக்கப்பட இருக்கும் கரு உருமாரி தெப்பத்தையும் ஆய்வு செய்து அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு மலர் தூவி வழிபாடு நடத்தினர்.

நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் குமர குருபரன் எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், நயினார் நாகேந்திரன், கலெக்டர் விஷ்ணு, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மேயர் சரவணன், துணைமேயர் ராஜு, உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த ஆட்சியில் திட்டமிடப்படாமல் கட்டப்பட்ட தமிழகத்தில் உள்ள 11 திருமேனி பாதுகாப்பு மையங்களிலும் காவலர்கள் நியமிப்பதில் இருந்த சிக்கலை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் திருமேனி பாதுகாப்பு மையங்கள் செயல்படும். தமிழகம் முழுவதும் அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.3,700 கோடி அளவிலான சொத்துக்கள் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளது.

நெல்லையப்பர் கோவிலில் கடந்த 8 ஆண்டுகளாக பணிகள் நடைபெறாமல் இருந்த அம்பாள் சன்னதி மேற்கு பிரகாரம், கரு உருமாரி தெப்பம் மற்றும் அம்பாள் சன்னதி மேல் கூரை ஓடு அமைக்கும் பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டு டி.வி.எஸ். நிறுவனத்தின் உபயத்தில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

ஒரு ஆண்டுக்குள் இந்த பணிகள் நிறைவு பெறும். வரும் ஆண்டில் ரூ.1,000 கோடி செலவில் 1,500 கோவில்களில் திருப்பணி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுக்கு மேலான கோவில்கள் திருப்பணிக்கு ரூ.100 கோடி தமிழக அரசு சார்பில் ஒதுக்கீடு செய்து ரூ.60 கோடிக்கு அரசாணை வழங்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் ரூ.40 கோடிக்கான அரசாணை வெளியிடப்பட்டு மானிய கோரிக்கைக்கு முன்னதாக அனைத்து பணிகளும் நிறைவு பெறும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நூறாண்டுகள் பழமை வாய்ந்த 100 சிறிய கோவில்கள் சீரமைக்க தமிழக அரசு சார்பில் ரூ.100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நகரப் பகுதிகளில் உள்ள 200 கோவிலில் புனரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. எந்த காலத்திலும் இல்லாத அளவில் கோவில்கள் குடமுழுக்கு, திருப்பணிகள் மற்றும் ஓடாத தேர்களை ஓட வைப்பதற்கான தேர் திருப்பணிகள் ஆகியவை சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

முழு சுதந்திரத்துடன் அறநிலையத்துறை செயல்படுவதற்கான சான்றாக இந்த பணிகள் அமைந்துள்ளது. அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில்களில் உள்ள வாகனங்கள் சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அறநிலை துறைக்கு சொந்தமான கல்லூரிகள் தற்காலிகமாக 4 இயங்கி வரும் நிலையில் மீதமுள்ள கல்லூரிகளுக்கான அனுமதி வழங்குவது தொடர்பான நீதிமன்ற வழக்கு முடிவு பெற்றபின் செயல்பாட்டுக்கு வரும்.

நெல்லையப்பர் கோவில் தேருக்கு கண்ணாடி தகடு அமைப்பது தொடர்பான மதிப்பீடு செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு அடுத்த மானிய கோரிக்கையில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Share this story