சென்னையில் தொடர்மழையால் நோய் பரவும் ஆபத்து : எச்சரிக்கை குறிப்புகள்..

By 
rain12

'மெட்ராஸ் ஐ' என்று சொல்லக்கூடிய கண் நோய் சென்னையில் பரவுகிறது. இதனால் கண் மருத்துவமனைகளிலும், கிளினிக்குகளிலும் கூட்டம் அதிகமாக உள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் கண் நோய் தொற்று பரவல் ஏற்படும். தற்போது மழைக்காலம் தொடங்கி இருப்பதால் 'மெட்ராஸ் ஐ' வேகமாக பரவுகிறது. கண் உறுத்தல், சிகப்பு நிறமாக மாறுதல், கண்ணில் இருந்து அழுக்கு வெளியேறுதல் போன்றவை கண் நோயின் அறிகுறியாகும். 

இந்த அறிகுறிகளுடன் குழந்தைகள், அதிகளவில் காணப்படுகின்றனர். பெரியவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற அறிகுறி ஏற்பட்டால் உடனே கண் மருத்துவரை அணுக வேண்டும். மருந்து கடைகளில் சொட்டு மருந்தோ, டியூப் மருந்தோ வாங்கி பயன்படுத்தக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இருமல், சளி இருப்பவர்களிடம் இருந்து சற்று விலகியே இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அருந்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளனர். தொடர் மழை காரணமாக, குளிர்ந்த காற்று வீசுவதால் காய்ச்சல் பரவவும் வாய்ப்பு உள்ளது. 

குறிப்பாக டெங்கு, சிக்குன் குனியா காய்ச்சல்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. எனவே காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சற்று விலகி இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். 

மழைக்காலத்தில் பொதுவாக இதய நோய் பிரச்சினை இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பார்கள். அது போக குழந்தைகளை வைத்திருப்பவர்களும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

பருவமழைக்கு ஏற்ப சென்னை மருத்துவமனையில் தேவைக்கு ஏற்ப மருந்து மாத்திரைகள் கையிருப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
................

Share this story