பள்ளி மாணவி பலாத்காரம் : போலீசில் தாய் புகார்

By 
rape

பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 

இதனை தடுக்க போலீசார் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். எனினும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை தொடர்ந்து நீடித்து வருகிறது. 

பலாத்காரம் :

இந்நிலையில், திருவள்ளூரில் 10-ம் வகுப்பு மாணவியை உடன் படிக்கும் மாணவர்கள் ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் திருவள்ளூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். 

இவர், அதே பள்ளியில் உடன்படிக்கும் வேப்பம்பட்டை சேர்ந்த 2 மாணவர்களுடன் நட்பாக பழகி வந்தார். 

இந்நிலையில், பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்ல தயாராக இருந்த மாணவியை, மாணவர்கள் இருவரும் நைசாக பேசி வேப்பம்பட்டுக்கு அழைத்துச் சென்றனர். நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல் மாணவியும் அங்கு சென்றார். 

அங்கு மாணவர்களில் ஒருவரது வீட்டுக்கு மாணவி சென்றபோது வீட்டில் யாரும் இல்லை. அப்போது மாணவர்கள் இருவரும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தனர். 

கர்ப்பம் :

பின்னர், இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று தெரிவித்து மாணவியை அனுப்பி வைத்து விட்டனர். இதற்கிடையே மாணவி கர்ப்பம் அடைந்தார். 

இதுபற்றி அவரது பெற்றோர் விசாரித்தபோதுதான் உடன்படிக்கும் மாணவர்கள் மகளிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதனால், அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 

போலீசார் மாணவர்கள் இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
*

Share this story