திருவண்ணாமலை 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் : 8 லட்சம் பக்தர்கள் தரிசனம்..

By 
deepam5

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

விழாவின் ஒரு பகுதியாக இன்று அதிகாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில், அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை அருணாசேலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலையாருக்கு அரோகரோ கோஷம் எழுப்பி மகா தீபத்தை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதைதொடர்ந்து, அண்ணாமலையார் கோயில் நுழைவாயிலில் தீபம் ஏற்றப்பட்டது. தீபத்தை காண சுமார் 8 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளதால் மகாதீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் மூலம் திருவண்ணாமலைக்கு வந்து குவிந்துள்ளனர்.

பக்தர்களுக்கு உதவுவதற்காக 83 சிறப்பு பூத்கள் அமைக்கப்பட்டுள்ளன. மகா தீபத்திற்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650 கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது. தீபம் ஏற்றப்படும் திரிக்காக 100 மீட்டர் காடா துணி பயன்படுத்தப்பட்டுள்ளது. தீபத்தை ஏற்ற நாள்தோறும் 2 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது.

தீபம் ஏற்றப்படும் தீப கொப்பரையானது செம்பினால் செய்யப்பட்டது. கொப்பரையில் ஏற்றப்படும் மகா தீபம் 11 நாட்கள் எரியும். தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரம் மற்றும் கோவிலை சுற்றி வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் 4 டி.ஐ.ஜி., 27 போலீஸ் சூப்பிரண்டுகள் என 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் நேற்று முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் திருவண்ணாமலை நகரமே போலீசாரின் முழு கட்டுபாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
 

Share this story