நாங்கள், மதத்திற்கு எதிரிகள் அல்ல : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

By 
temple2500

வில்லிவாக்கத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு 2500 திருக்கோயில்களின் திருப்பணிக்கு தலா 2 லட்சம் வீதம் ரூ. 50 கோடி நிதி வழங்கினார் பின்னர் முதலமைச்சர் பேசியதாவது:

கடந்த ஓராண்டு காலத்தில் 640 நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்றிருக்கிறேன். 8550 கி.மீட்டர் நான் சுற்றி வந்திருக்கிறேன். இதன் மூலம் மக்களுக்கு நேரடியாக 1 கோடி 3 லட்சத்து 74 ஆயிரத்து 355 பேர் பயன் அடைந்திருக்கிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகளில் பயன் அடைந்தவர்கள் இவர்கள். உள்துறை சார்ந்த 32 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன், தொழில் துறை சார்ந்த 30 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். அதற்கு அடுத்து இந்து சமய அறநிலையத் துறை சார்பாக 25 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதை நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக ஆட்சி அமைந்த பிறகு கோவில்களுக்கு ஏராளமான திருப்பணிகள் நடைபெறுகின்றன. இந்த வெற்றிக்கு காரணமான நம்முடைய செயல்பாபு என்கிற, போற்றப்படுகின்ற சேகர்பாவுவை நான் பாராட்டுகிறேன்.

அனைத்து துறையும் வளர வேண்டும் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். திராவிடம் என்ற சொல்லை பிடிக்காதவர்கள் எங்களை மதத்தின் விரோதிகளாக சித்தரிக்கின்ற முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிக்கிறார்கள். நாங்கள் மதவாதத்திற்கு தான் எதிரிகளே தவிர, மதத்திற்கு எதிரிகள் அல்ல. இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.
 

Share this story