தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மதுபானம் : ஆணையாளர் நடவடிக்கை
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. நோய் தொற்று பரவலை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்பவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பத்தில் உள்ள அரசு மதுபானக் கடையில், நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் அனுப்பியிருந்த சுற்றறிக்கையை கடையில் ஒட்டாமல் வைத்திருந்ததால், பணியில் இருந்த ஊழியரை அவர் எச்சரித்தார்.
பின்னர், சுற்றறிக்கையை பொது மக்கள் பார்வையில் படும்படி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மது பாட்டில் விற்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த நடைமுறையை பின்பற்றுகிறீர்களா? என்று மதுக்கடை ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது, ஊழியர்கள் அவரிடம் கொரோனா தடுப்பூசி பற்றி கேட்டால் மதுபானம் வாங்க வருபவர்கள் தகராறில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக, நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் கூறியதாவது :
கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மது பாட்டில் விற்க வேண்டும். இதுபற்றி யாரேனும் தகராறில் ஈடுபட்டால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
அப்போது, வட்டார மருத்துவ அலுவலர் யுவராஜ், நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், மருத்துவர் வீணா ஆகியோர் உடன் இருந்தனர்.