பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து 450 சிறப்பு பேருந்துகள்..
![strike2](https://www.kalakkalnews.com/static/c1e/client/85542/uploaded/b9a017fc6681e2c47ec7818651311285.webp)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் பயணிகள் ஆறு பேருந்து நிலையங்களுக்கு எளிதாக சென்று வெளிமாவட்ட நீண்ட தூர பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக, மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கூடுதலாக 450 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், இ.ஆ.ப, தெரிவித்துள்ளதாவது:
''15.01.2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் எதிர்வரும் 12.01.2024 முதல் 14.01.2024 ஆகிய 3 நாட்களுக்கும் வெளியூர் செல்லும் பேருந்துகள் கீழ்க்குறிப்பிட்டுள்ள ஆறு இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1.கோயம்பேடு பேருந்து நிலையம்
2.கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
3.மாதவரம் புறநகர் பேருந்து நிலையம்
4.பூவிருந்தவல்லி பேருந்து நிலையம்/பூவிருந்தவல்லி Bye Pass
5.தாம்பரம் புதிய பேருந்து நிலையம் (MEPZ) & தாம்பரம் பேருந்து நிலையம்
6.கே.கே.நகர் பேருந்து நிலையம்
சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேற்குறிப்பிட்ட ஆறு பேருந்து நிலையங்கள்/பகுதிக்கு மாநகரப் பேருந்துகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன.
எனினும் எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு. வெளியூர் பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள ஆறு பேருந்து நிலையங்களுக்கு எளிதாக சென்று வெளிமாவட்ட நீண்ட தூர பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக, மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கூடுதலாக 450 சிறப்பு இணைப்பு பேருந்துகள் 12.01.2024 முதல் 14.01.2024 ஆகிய 3 நாட்களுக்கு இயக்கப்படுகிறது''.
மேலும், ''பொங்கல் பண்டிகை முடித்து ஊர் திரும்பும் பொது மக்களின் நலனுக்காக 17.01.2024 புதன்கிழமை மற்றும் 18.01.2024 வியாழக்கிழமை அன்று மாலை மற்றும் இரவுப்பணி (PM & Night Shift) பேருந்துகள் 50 பேருந்துகள் மற்றும் 18.01.2024 வியாழக்கிழமை & 19.01.2024 வெள்ளிக்கிழமை அதிகாலை 125 பேருந்துகள் இயக்கப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.