மர்மதேசம் போல செயல்பட்டு வந்த ஆசிரமம் : 15 பேர் மீட்பு; திடுக்கிடும் தகவல்கள்..

By 
ashram

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குண்டலப்புலியூர் என்ற இடத்தில் 'அன்பு ஜோதி' என்ற பெயரில் ஆதரவற்றோர் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்தில் மர்மமான முறையில் பல்வேறு சட்ட விரோத செயல்கள் நடப்பதாக புகார்கள் கூறப்பட்டு வந்தன.

மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோரில் பல பெண்களும் இங்கு தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் ஆசிரமத்தில் தங்கி இருந்த பெண்கள் பலர் போதை மருந்து கொடுத்து கற்பழிக்கப்பட்டிருப்பதாக பரபரப்பான புகார்கள் கூறப்பட்டுள்ளன.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆசிரமத்தில் நான் தங்கி இருந்தபோது என்னை சங்கிலியால் கட்டி வைத்து போதை பொருள் கொடுத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தினர் என்கிற அதிர வைக்கும் குற்றச்சாட்டை கூறியதை தொடர்ந்து அதிகாரிகள் அதிரடி விசாரணையில் இறங்கினர். அப்போதுதான் ஆசிரமத்தில் பல்வேறு சட்டவிரோத செயல்கள் நடைபெற்று வந்தது வெட்ட வெளிச்சமானது.

ஒடிசாவைச் சேர்ந்த பெண் தனது மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்துள்ளார். விழுப்புரத்தில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்த அவரை மீட்பு குழு ஒன்று மீட்டு அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்த்துவிட்டுள்ளது. இதன் பின்னர் 5 ஆண்டுகள் அந்த ஆசிரமத்திலேயே தங்கி இருந்த அப்பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது உறுதியானது.

இதையடுத்து ஆசிரம உரிமையாளர் மற்றும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. இதையடுத்து ஆசிரமத்தை நடத்தி வந்த நபரான பிஜூ அவரது மனைவி உள்பட 8 பேர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. வெளி மாநில பெண் அளித்த பாலியல் புகாரின் பேரில் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அன்பு ஜோதி ஆசிரமம் கடந்த 17 ஆண்டுகளாக லைசென்ஸ் இல்லாமல் செயல்பட்டு வந்ததும் வருவாய்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் தனியாக ஒரு வழக்கும் போடப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக ஆசிரமம் நடத்திய குற்றத்துக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து ஆசிரமத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஒடிசா பெண்ணை போன்று மேலும் பல பெண்கள் ஆசிரமத்தில் சிறை வைக்கப்பட்டு வலுக்கட்டாயமாக கற்பழிக்கப் பட்டிருக்கலாம் என்கிற சந்தேகம் போலீசுக்கு எழுந்துள்ளது.

இந்த ஆசிரமத்தில் மொத்தம் 150 பேர் வரை தங்கி இருந்துள்ளனர். இவர்களில் சிலர் மாயமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. மற்ற அனைவரும் மீட்கப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆசிரமத்தில் குரங்குகளை கூண்டில் அடைத்து வைத்திருந்ததும், பல நேரங்களில் குரங்குகளை வெளியில் திறந்து விட்டு கடிக்க வைத்திருக்கும் திடுக்கிடும் தகவலும் விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது.

இதனால் மீட்கப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்றோரின் உடல்களில் காயங்கள் தடிப்பு தடிப்பாக இருந்துள்ளன. இவைகளை எல்லாம் போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த காயங்கள் குரங்குகள் கடித்ததால் மட்டும் ஏற்பட்டதா? இல்லை வேறு வகையில் சித்ரவதை செய்யப்பட்டதால் நிகழ்ந்ததா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த ஆசிரமத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கும் ஆதரவற்றோர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூருக்கு 15 பேர் வரை அனுப்பப்பட்டுள்ளனர். இது தொடர்பாக முறையான பதிவேடுகளும் ஆசிரமத்தில் இல்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 இந்த ஆசிரமம் தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறும்போது, "மர்ம தேசம் போல ஆசிரமம் செயல்பட்டு வந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். 

Share this story