ஆடியோ விவகாரம் : முதலமைச்சருடன், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு..

By 
palani8

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக 2 ஆடியோக்களை வெளியிட்டார். அதில் முதல் ஆடியோவில் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் 2 ஆண்டுகளில் ரூ.30 ஆயிரம் கோடி சொத்து சேர்த்துள்ளதாக பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்பட்டது. அண்ணாமலை வெளியிட்ட 2-வது ஆடியோ அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

இந்நிலையில், அண்ணாமலை அளித்த பேட்டியில், "ஆடியோ விவகாரம் தொடர்பாக கோர்ட்டுக்கு சென்றால் ஒரிஜினல் ஆடியோவும் என்னிடம் உள்ளது. அந்த ஒரிஜினல் ஆடியோவையும், எங்கே, எப்போது யாரிடம் பேசப்பட்டது என்பதையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்" என்று கூறினார்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சந்தித்து பேசினார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் இன்று காலையில் இந்த சந்திப்பு நடந்தது. சிறிது நேரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிக்கொண்டிருந்தார். ஆடியோ விவகாரம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் 25-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது அலுவலகத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார். அதன் பிறகு இன்று மீண்டும் சந்தித்து பேசியுள்ளார்.

தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (2-ந் தேதி) நடைபெற உள்ளது. இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. அமைச்சரவை கூட்டம் நடைபெறும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this story