'அந்த' அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு: அமித்ஷா அறிவிப்பு

By 
amitshah9

உபா சட்டத்தின் கீழ் சிமி அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். சிமி அமைப்பு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிமி எனப்படும் இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம் சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் அதன் மீது விதிக்கப்பட்ட தடை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை வளர்ப்பதிலும், அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதிலும், பாரதத்தின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்களிலும் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது என்று அமித் ஷா கூறியுள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒருபோதும் பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ளாது என்றும் கூறியுள்ளார்.

2017ல் கயாவில் நடந்த குண்டுவெடிப்பு, 2014ல் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த தாக்குதல், 2014ல் போபாலில் சிறை உடைப்பு உள்ளிட்ட பயங்கரவாதச் செயல்களில் சிமி உறுப்பினர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

சிமி அமைப்பு 1977ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் அலிகாரில் நிறுவப்பட்டது. இந்த அமைப்பு இந்தியாவை ஒரு இஸ்லாமிய நாடாக மாற்றும் முயற்சியுடன் செயல்படுவதாகக் கருதப்படுகிறது.

2001ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் முதன்முதலில் சிமி அமைப்பு தடை செய்யப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போதும் சிமி அமைப்பின் மீது ஐந்து ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

Share this story