சிறந்த காளை ‘சின்னக்கருப்பு’, சிறந்த வீரர் பிரபாகரனுக்கு கார் பரிசு: பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் 49 பேர் காயம்

By 
vadi1

புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இப்போட்டியில் 14 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் பிரபாகரனுக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. சிறந்த காளையாக புதுக்கோட்டை மாவட்டம் ராயவயல் பகுதியைச் சேர்ந்த மருதுபாண்டி என்பவரின் `சின்னக்கருப்பு' என்ற காளை தேர்ந்தெடுக்கப்பட்டது. காளையின் உரிமையாளருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 49 பேர் காயம் அடைந்தனர்.

பொங்கல் பண்டிகையையும் ஜல்லிக்கட்டுப் போட்டியையும் பிரித்துப் பார்க்க முடியாது. தமிழர்களுடைய வீரத்தையும், பாரம்பரியத்தையும் உலகறியச் செய்த இந்த ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தைப் பொங்கலையொட்டி ஆண்டுதோறும் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் புகழ்பெற்றவை.

இதில், பாலமேட்டில் செவ்வாய்க்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. பாலமேடு மஞ்சமலை ஆற்றுத்திடலில் அமைக்கப்பட்ட வாடிவாசலில் தமிழக அரசும், பாலமேடு கிராமப் பொது மகாலிங்க மடத்துக் குழுவும் இணைந்து இந்தப் போட்டியை நடத்தின.

1000 காளைகள், 600 வீரர்கள் - மதுரை மட்டுமில்லாது தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த காளைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றன. போட்டியில் பங்கேற்க 3,677 காளைகளும் 1,412 மாடு பிடி வீரர்களும் ஆன்லைனில் பதிவு செய்திருந்தனர். அதில், 1000 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டனர். காலை 7 மணியளவில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடு பிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

அதன் பிறகு போட்டியை வணிக வரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்துப் போட்டியைத் தொடங்கி வைத்தார். சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன், மடத்து குழுத் தலைவர் மலைச்சாமி, செயலாளர் பிரபு, பொருளாளர் ஜோதி தங்கமணி மற்றும் நிர்வாகிகள், கலந்து கொண்டனர். வாடிவாசல் அருகே களத்தில் வீரர்களும் காளைகளும் விளையாடுவதற்கு ஏதுவாக தேங்காய் நார்க் கழிவுகள் சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு ஒன்றரை அடி உயரத்துக்கு கொட்டப்பட்டிருந்தது.

கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் ராஜ்குமார் தலைமையில் 3 உதவி இயக்குநர்கள், 16 கால்நடை ஆய்வாளர்கள், 16 கால்நடை உதவியாளர்கள் தலைமையிலான குழுவினர் மாடுகளைப் பரிசோதனை செய்தனர். அவர்கள் பரிசோதனை செய்த பிறகே காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்க்கப்பட்டன. முதலில் பாலமேடு கிராமப் பொது மகாலிங்க மடத்துக் காளை உட்பட பல்வேறு கோயில் காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டன. அதன்பிறகு மாடுபிடி வீரர்கள் அடக்குவதற்காக ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்துவுிடப்பட்டன. போட்டி மொத்தம் 10 சுற்றுகளாக நடந்தன.

ஒவ்வொரு சுற்றிலும் 50 முதல் 75 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளைப் பிடிக்கும் வீரர்கள் அடுத்த சுற்றில் விளையாட அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு காளை உரிமையாளரையும் விழாக் குழுவினர் கவுரவிக்கும் வகையில் வாடிவாசலில் வைத்து வேட்டி, துண்டு வழங்கப்பட்டன. அதன்பிறகு அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். காளை மூன்று சுற்றுகள் சுற்றும் வரை வீரர் திமிலை இறுகப் பற்றியிருந்தால் அல்லது 100 மீட்டர் தூரம் வரை திமிலைப் பிடித்தவாறு சென்றால் மட்டுமே மாடு பிடி வீரர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஒரே நேரத்தில் பலர் காளையைப் பிடிக்க முயன்றபோது அந்தக் காளை பிடிக்கப்படாத காளையாக அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு காளையும் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டதும் மாடுபிடி வீரர்களை நோக்கிச் சீறிப் பாய்வதும் அவற்றை மாடுபிடி வீரர்கள் ஆக்ரோஷம் கொண்டு திமிலைப் பிடித்து அடக்குவதுமாக போட்டி சுவாரஸ்யமாகவும் உற்சாகமாகவும் நடந்தது.

சிறந்த மாடுபிடி வீரர் பிரபாகர்: மொத்தம் 10 சுற்றுகள் நடந்த போட்டியில் 14 காளைகளை அடக்கி மதுரை மாவட்டம் பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகர் சிறந்த மாடுபிடி வீரராகத் தேர்வானார். இவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சர் பி.மூர்த்தி காரை பரிசு வழங்கினார். 11 காளைகளை அடக்கிய அலங்காநல்லூர் அருகே சின்னப்பட்டி தமிழரசனுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது.

Share this story