சென்னை கொண்டுவரப்பட்ட பவதாரிணி உடல்: திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலிக்கு ஏற்பாடு..

By 
bhava1

மறைந்த பின்னணி பாடகர் பவதாரிணியின் உடல் இலங்கையிலிருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள், திரையுலகினர் அஞ்சலிக்காக தி.நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மறைந்த பவதாரிணி, கடந்த 2000-ம் ஆண்டில் வெளியான ‘பாரதி’ படத்தில் பாடிய ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ என்ற பாடலுக்காக தேசிய விருதை பெற்றார். தொடர்ந்து, ‘தேடினேன் வந்தது’, ‘காதலுக்கு மரியாதை’, ‘அழகி’, ‘பிரண்ட்ஸ்’, ‘தாமிரபரணி’ உட்பட பல படங்களில் பாடியுள்ளார்.

நடிகை ரேவதி இயக்கிய 'மித்ர மை பிரண்ட்' , பிர் மிலேங்கே ஆகிய இந்திப்படங்களுக்கும் தமிழில் இலக்கணம், அமிர்தம் உட்பட சில படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இவர் விளம்பர நிர்வாகி சபரிராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பவதாரிணி கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் சகோதரி. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதனையடுத்து அவரது உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. தியாகராய நகரில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் வீட்டில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பின்னர் இன்று இரவு பவதாரிணியின் உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதி மரியாதை செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Share this story