தேனியில் இன்று, பவதாரிணி உடலுக்கு இறுதிச்சடங்கு; நல்லடக்கம்..

By 
bhava2

கடந்த சில ஆண்டுகளாக இளையராஜா மகளும், பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் ஏற்கனவே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தச் சூழலில் அவர் தான் ஆயுர்வேத சிகிச்சை பெற இலங்கை சென்றிருந்தார். இருப்பினும், திடீரென அவரது உடல்நிலை மோசமான நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று ஜனவரி 25ஆம் தேதி மரணமடைந்தார்.

அவரது மரணத்திற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின், பிரபல இசையமைப்பாளர்கள் ஏ ஆர் ரஹ்மான் உள்ளிட்டோரும் பவதாரிணி மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

மேலும், பவதாரிணி உடல் இலங்கையில் இருந்து தமிழ்நாடு எடுத்து வர நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. அதன்படி இன்று பிற்பகல் பவதாரிணி உடல் சென்னைக்கு எடுத்து வரப்பட்டது. அவரது சகோதரர்கள் கார்த்திக் ராஜா, இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் பவதாரிணி உடலைப் பெறச் சென்னை விமான நிலையம் வந்திருந்தனர். ஏர்போர்ட்டில் இருந்து பவதாரிணி உடல் தி நகரில் இருக்கும் இளையராஜா வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கே உறவினர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என்று பலரும் அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதற்கிடையே நேற்றிரவு 10 மணியளவில்.. பவதாரிணி உடல் இளையராஜாவின் சொந்த மாவட்டமான தேனியில்,  இளையராஜா பங்களா இருக்கும் லோயர்கேம்பிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே பவதாரிணியின் உடல் அடக்கம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

இளையராஜாவின் சொந்த ஊர் பண்ணைபுரம். இருப்பினும், அவரது தாய் சின்னத்தாய், அவரது மனைவி ஜீவா ஆகியோரின் நினைவிடம், லோயர்கேம்ப் பங்களா என்ற தோட்டத்தில் தான் உள்ளது. அவரது தாய் மற்றும் மனைவியின் நினைவுநாள் உள்ளிட்ட நாட்களில் இளையராஜா அங்குச் சென்று தியானம் செய்வார்.

இதற்கிடையே பவதாரிணி உடலுக்கு இன்று காலை 10 மணிக்கு அங்கே இறுதிச்சடங்கு நடக்க உள்ளது. தொடர்ந்து பவதாரிணி தாய் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலேயே பவதாரிணி உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
 

Share this story