படகு கவிழ்ந்து 39 பேர் மாயம் : தேடும் பணியில் பாதுகாப்புப்படை தீவிரம்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி பகுதியில், கடலோரக் காவல் படையினர், ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது நடுக்கடலில் படகு ஒன்று கவிழ்ந்து கிடப்பதைக் கண்டனர்.
பின்னர், அருகில் சென்று பார்த்தபோது, படகின் மேற்பகுதியில் ஒருவர் அமர்ந்து கொண்டு உயிருக்கு போராடுவதை பார்த்தனர்.
அவரை, கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக, அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தது.
ஆட்கடத்தல் கும்பல் :
இது தொடர்பாக மியாமி கடற்படை பாதுகாப்பு வட்டாரம் தெரிவிக்கையில்,
'கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஒரு ஆட்கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
இவர்கள், கடந்த 21-ம் தேதி இரவு 39 பேரை ஏற்றிக்கொண்டு பகாமா தீவில் இருந்து புறப்பட்டுள்ளனர்.
மோசமான வானிலை காரணமாக, மியாமி கடற்பகுதியில் திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
மாயம் :
இந்த விபத்தில், கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவரை தவிர, அனைவரும் மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது.
இவர்களை தேடும் பணியில் கடற்படை வீரர்கள் தீவிரமாக தேடி வருவதாக அவர் தெரிவித்தார்.
சமீபத்தில், கனடாவில் இருந்த அமெரிக்காவிற்குள் ஆட்கடத்தல் கும்பலின் உதவியோடு நுழைய முயன்ற நான்கு இந்தியர்கள் கடும் பனியில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
*