ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல்.! - தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு..

By 
voting

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிவடைந்து, தற்போது தான் அரசியல் கட்சிகள் நிம்மதி மூச்சு விட்டிருந்த நிலையில், தற்போது விக்கரவாண்டி தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக் குறைவால் காலமானார். இதனையடுத்து, நாடாளுமன்ற தேர்தலோடு விக்கிரவாண்டி தொகுதிக்கும் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலோடு சேர்த்து விக்கிரவாண்டி தொகுதிக்கும் தேர்தல் அறிவித்துள்ளது. அந்த வகையில் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு  தாக்கல் செய்யும் தேதி ஜூன் 14ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது,  வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் ஜூன் 21ஆம் தேதியும், ஜூன் 24ஆம் தேதி வேட்பு மீதான பரிசீலனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஜூன் 26 ஆம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருப்பதாகவும், ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் அறிவிப்பு காரணமாக அரசியல் கட்சிகள் மத்தியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பாராளுமன்ற தேர்தலில் கை விட்டு சென்ற வெற்றியை பறிக்க எதிர்கட்சிகள் களம் இறங்கவுள்ளது.

Share this story